கரூர், தர்மபுரி மாவட்டங்களை வறுத்தெடுத்த வெப்ப அலை.. 5 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்!

Su.tha Arivalagan
Apr 07, 2024,05:28 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கடும் வெயில் இப்போதைக்கு முடிவுக்கு வராது போல. கரூர், தர்மபுரி மாவட்டங்களில் வெப்ப அலை வீச்சு நிலவியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


தமிழ்நாடு முழுவதும் கோடைகாலம் கொளுத்தி எடுத்து வருகிறது. வெளியில் தலை காட்ட முடியவில்லை. அந்த அளவுக்கு வெயில் வறுத்தெடுக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் கரூர், தர்மபுரி மாவட்டங்களில் வெப்ப அலை தாக்கியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 




9 நகரங்களில் உச்சகட்ட வெப்ப நிலை பதிவானதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சேலத்தில் 41.5 டிகிரி செல்சியஸ் அதாவது  107 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.  திருப்பத்தூரில் 107, கரூர் பரமத்தியில் 106, வேலூரில் 105 டிகிரி வெயில் அடித்துள்ளது. தர்மபுரி, ஈரோட்டில் தலா 105 டிகிரி வெயில் பதிவானது. அதேபோல திருச்சியிலும் 105 டிகிரி அளவுக்கு வெயில் வெளுத்துள்ளது.


திருத்தணி, நாமக்கல் நகரங்களில் தலா 104 டிகிரி அளவுக்கு வெயில் பதிவானது. மதுரை, சென்னை, கோயம்புத்தூர், தஞ்சாவூரில் 102 முதல் 103 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது.  சென்னையைப் பொறுத்தவரை வெயில் அளவு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.  பிற மாவட்டங்களில் பெரிய அளவில் மாற்றமில்லை. அடுத்த 5 நாட்களில் வெயிலின் அளவானது  2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்று  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.