மண்ட பத்ரம்.. வெயில் இன்றும் வெளுத்தெடுக்கும்.. அதிகபட்ச வெப்ப நிலை 4 டிகிரி வரை உயரலாம்!

Manjula Devi
Sep 17, 2024,07:34 PM IST

சென்னை:   தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த வாரத்திற்கு முன்பு வரை பரவலாக மிதமான மழை பெய்து வந்தது. இதனால் வெயில் சற்று குறைந்து இதமான சூழ்நிலை நிலவியது. இதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் மழை குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கோடை வெயிலை மிஞ்சும் அளவுக்கு வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  சென்னை, மதுரை என முக்கிய நகரங்களில் வெயில் கொளுத்துவதால் மக்கள் புழுக்கத்தில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.




இதற்கிடையே வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து ராஜஸ்தான் வரை சென்று வலுவிழக்க உள்ளது. இதனால் தென்மேற்குப் பருவ மழை தீவிரம் அடைந்ததை அடுத்து மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால் தென் தமிழகத்தில் மழையின் அளவு குறைந்து அநேக இடங்களில்  வறண்ட வானிலேயே நிலவி வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. 


தற்போது நிலவிவரும் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அச்சப்பட்டு வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். தமிழகத்தில் நேற்று பல இடங்களில் வெயில் தாக்கம் அதிகரித்து சதம் அடித்துள்ளது. குறிப்பாக மதுரையில் அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் சுட்டெரித்தது. அதேபோல் சென்னையில் 102 பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தியது.


இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை  உயரக்கூடும்.அப்போது அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஒரு சில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். 


150 ஆண்டுகளில் செப்டம்பரில் 5வது முறையாக 


கடந்த 150 ஆண்டுகளில், செப்டம்பர் மாதத்தில் இப்படி அதிக அளவில் வெயில் அடிப்பது இது ஐந்தாவது முறையாகும் என்று தகவல்கள் கூறுகின்றன.  அதேசமயம், மேலும் மேற்கு திசை காற்றின் மேக வேறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



சென்னையில் 102 டிகிரி வரை வெளுக்கும்


தமிழ்நாட்டில் நாளையும் வெயில் சுட்டெரிக்கும். அப்போது ஒரு சில இடங்களில் இயல்பை விட 7 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும். குறிப்பாக சென்னையில் 102 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  காலையிலேயே சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் வெயில் கொளுத்துகிறது. கூடவே காற்றும் வீசுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்