நாங்கெல்லாம் அப்பவே அப்படி..  அஸ்வினின் டாப் சீக்ரெட்டை உடைத்த மனைவி

Aadmika
May 05, 2023,12:44 PM IST
டில்லி : இந்திய கிரிக்கெட் அணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 10 ஆண்டுகளாக களத்தில் கலக்கி வருகிறார். அவரது வெற்றிப் பயணம், அதிரடிகள் தற்போது நடந்து வரும் ஐபிஎல் 2023 கிரிக்கெட் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

36 வயதாகும் அஸ்வின் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். அவரது பெரும் பலமாக, தூணைப் போல இருப்பவர் அவரது மனைவி ப்ரித்தி அஸ்வின் தான். இவர் சமீபத்தில் ஜியோ சினிமாவில் Hangout நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது தனது கணவர் பற்றிய பல ரகசியங்களை ஓப்பனாக பேசினார். இது அஸ்வின் ரசிகர்களை வேற லெவலில் கொண்டாட வைத்துள்ளது. 



தங்களின் ஆரம்ப கால காதல் நாட்கள் குறித்து பேசிய ப்ரித்தி, நானும் அஸ்வினும் ஒரே ஸ்கூலில் தான் படித்தோம். அப்போது இருந்தே எங்களுக்கு ஒருவரை ஒருவர் நன்கு தெரியும். வளர்ந்த பிறகும் மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. நான் ஈவன்ட்ஸ் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அவருக்கு என் மீது ஆரம்பத்தில் இருந்தே கண்ணா பின்னா என க்ரஷ். இது ஒட்டுமொத்த ஸ்கூலுக்கே தெரியும்.

அவர் ஸ்கூலில் இருந்து விலகி கிரிக்கெட்டில் கவனம் செலுத்த துவங்கி விட்டார். இருந்தாலும் எங்களின் நட்பு தொடர்பு கொண்டிருந்தது. பிறந்தநாள், வழியில் சந்திப்பது என இருந்தோம். நான் சிஎஸ்கே நிகழ்வுகளை கவனித்துக் கொள்ளும் பணியில் இருந்த போது மீண்டும் நாங்கள் சந்தித்தோம். திடீரென அவர் ஆறடியில் வளர்ந்து நிற்பதை கண்டு மிரண்டு போய்விட்டேன். கிரேடு 7 படிக்கும் போதிருந்தே எங்களுக்கு ஒருவரை ஒருவர் நன்கு தெரியும். 

அதிர்ஷ்டவசமாக சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருந்த நாங்கள், காதலர்களாகவும் ஆனோம். அவர் எப்போது ஸ்டிரைட் ஆன ஆள். ஒரு நாள் ஒரு கிரிக்கெட் மைதானத்திற்கு என்னை அழைத்துச் சென்று, நெற்றி பொட்டில் அடித்தது போல், நான் உன்னை விரும்புறேன். வாழ்நாள் முழுவதும் உன்னுடன் இருக்க நினைக்கிறேன். வாழ்க்கை முழுதும் உன்னை நேசிப்பேன். இது 10 வருடத்திற்கு மேல் ஆனாலும் மாறி விடாது. நாம் பெரியவங்க. வாழ்ந்து பார்க்கலாமே என சொன்னார்.

அஸ்வின் பற்றி பல விஷயங்களை பகிர்ந்து கொண்ட ப்ரித்தி, ஒரு கணவராக, ஒரு தந்தையாக அஸ்வின் எப்படி என்பதையும் விளக்கினார். நாங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பை நாங்கள் போடும் சண்டையே வெளிப்படுத்தும். அது தான் அஸ்வின். இன்று காலை கூட நாங்கள் சண்டை போட்டோம். எதுக்குன்னு கூட எனக்கு நினைவில் இல்லை. கிண்டலாக ஏதாவது பெயர் வைத்து என்னை கூப்பிடுவார். அதில் சண்டை வரும். திடீரென அதை அப்படியே கிண்டலாக ஒரு தருணமாக மாற்றி விடுவார் என்றார் ப்ரீத்தி.