அச்சச்சோ.. இன்னும் சரியாகாத காயம்.. ஐபிஎல் 2024ல் இருந்து ஹர்திக் பாண்ட்யா விலகுகிறாரா?

Meenakshi
Dec 23, 2023,06:21 PM IST

மும்பை: மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக சமீபத்தில் நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா  இன்னும் காயம்  சரியாகததால், ஐபிஎல் 2024 தொடரில் விளையாடுவது சந்தேகம்தான் என்று தகவல்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளன.


ஹர்திக் பாண்ட்யாவிற்கு கணுக்காலில் ஏற்பட்ட காயம் இன்னும் சரியாகவில்லை. இதனால் அவர் விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.


சமீபத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட வீரர்தான் ஹர்திக் பாண்ட்யா. கடந்த 2 சீசனாக அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வந்தார். இந்த நிலையில், ஐபிஎல் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ்  அணியிலிருந்து அதிரடியாக மும்பை இந்தியன்ஸுக்கு வந்தார். ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் அவர் அறிவிக்கப்பட்டார்.  ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களுக்கு பொருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.




ரசிகர்களின் ஏமாற்றம் கோபமாக மாறி, மும்பை இந்தியன்ஸ் அணியை சமூக வலைதளங்களில் அன் பாலோ செய்தனர். இந்த நிலையில்தான் ஹர்திக் பாண்ட்யாவுக்கு காயம் சரியாகவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. இதனால் இந்தத் தொடரில் அவர் விளையாடுவது சந்தேகமாம். அவர் விளையாட முடியாமல் போனால் ரோஹித் சர்மாவே கேப்டனாக தொடரக் கூடும் என்று தெரிகிறது.


சமீபத்தில் முடிவடைந்த உலகக் கோப்பை போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரானஆட்டத்தின் போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. அதிலிருந்து அவர் இன்னும் சரியாகவில்லை என்று கூறப்படுகிறது.   ஐபிஎல் தொடருக்குள் அவர் சரியாகி விடுவார் என்று கருதப்பட்டது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்று கருதப்படுவதால் அவர் விளையாடுவது சந்தேகம்தான் என்று சொல்கிறார்கள்.