மார்கழி அமாவாசை 2024 .. துன்பம் போக்கும் அனுமன் ஜெயந்தி.. ஸ்ரீராம ஜெயம் சொல்லுங்கள்

Aadmika
Jan 11, 2024,10:22 AM IST

சென்னை : ராம சேவைக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அனுமன் அவதரித்த நாளை நாம் அனுமன் ஜெயந்தியாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். 


தைரியம், வீரம், பலம், பக்தி, சேவை, பேச்சாற்றல் இவை அனைத்திற்கும் உதாரணமாக விளங்குபவர் அஞ்சனை மைந்தன் அனுமன். ராம சேவை, ராம பக்தியே உயர்ந்தது, ராம நாமத்திற்கு இணையாவது இந்த உலகில் எதுவும் இல்லை என உலகிற்கு உணர்த்தியவர் அனுமன். ராம காவியத்தில் தவிர்க்க முடியாத ஒரு கதாபாத்திரம். அனுமனை வாயு புத்திரன் என சொன்னாலும் இவர் சிவ பெருமானின் அவதாரங்களில் ஒன்றாக கருதப்படுகிறார். அனுமனை வழிபட்டால் சிவனையும், விஷ்ணுவையும் ஒன்றாக வணங்கிய பலன் கிடைக்கும்.




அனுமன் அவதரித்தது மார்கழி மாத அமாவாசை திதியுடன் கூடிய மூலம் நட்சத்திரத்தில் என புராணங்கள் சொல்கின்றன. ஆனால் வடஇந்தியாவில் சித்திரை மாதத்திலேயே அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அதே சமயம் ஆந்திராவின் சில பகுதிகளில் வைகாசி மாதத்திலேயே அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்திலேயே அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 11 ம் தேதி வியாழக்கிழமையில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இது இந்த ஆண்டின் முதல் அமாவாசை என்பதால் கூடுதல் சிறப்பு பெறுகிறது. 


அனுமன் ஜெயந்தி அன்று அனுமன் கோயில், ராமர் கோவில் அல்லது பெருமாள் கோவிலுக்கு சென்று அனுமனுக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை சாற்றி வழிபடலாம். வெண்ணெய் காப்பு, செந்தூரம் சாத்தி வழிபடலாம். முடியாதவர்கள் வீட்டிலேயே எளிமையாக ஆஞ்சநேயருக்கு பிரியமான அவல், பொரி, வாழைப்பழம், சர்க்கரை, கற்கண்டு உள்ளிட்டவற்றை படைத்து வழிபடலாம். இந்த நாளில் அனுமன் சாலிசா, ஸ்ரீராம ஜெயம் போன்ற மந்திரங்களை படிப்பது மிகவும் சிறப்பு. சுந்தரகாண்டம் படிக்கலாம்.


அனுமன் ஜெயந்தி அன்று அனுமனை வழிபடுவதால் துன்பங்கள், தடைகள் அனைத்தும் நீங்கி, நன்மைகள் பெருகும். வெற்றிகள் சேரும். நோய்கள் நீங்கும். சனி தோஷம் உள்ளிட்ட கிரக தோஷங்கள் விலகும். தைரியம் பெருகும், பலம் விலகும். மங்கலங்கள் கூடும். திருமண தடைகள் நீங்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி கிடைக்கும்.