எச். ராஜா பகீர் டிவீட்.. இன்னும் 48 மணி நேரம்தான்... "நேரம் நெருங்கி விட்டது"

Su.tha Arivalagan
Jul 13, 2023,09:29 AM IST
சென்னை: பாஜக மூத்த தலைவர் எச். ராஜா போட்ட பகீர் டிவீட்டால் பரபரப்பு கிளம்பியுள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சி முடிவுக்கு வருமா என்றெல்லாம் அவர் அந்த டிவீட்டில் கேட்டுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை முன் வைத்து தமிழ்நாட்டு அரசியலில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது. ஆளுநர் ஆர். என். ரவி ஒருபக்கம் செந்தில் பாலாஜியைக் குறி வைத்து தீவிரமாக இருக்கிறார். மறுபக்கம் பாஜக இந்தப் பிரச்சினையை தீவிரமாக கையாண்டு வருகிறது.



செந்தில் பாலாஜி கைது தொடர்பாக சட்டப் போராட்டமும் நடந்து வருகிறது. அவர் தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரது நீதிமன்றக் காவலை நேற்றுதான் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி அல்லி நீட்டித்து உத்தரவிட்டார்.

இன்னொரு பக்கம் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக டெல்லியில் சட்ட ஆலோசனையில் ஆளுநர் ஆர். என். ரவி ஈடுபட்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் அவர் ஏற்கனவே இதுதொடர்பாக சந்தித்துப் பேசியுள்ளார். இப்படி பரபரப்பாக போய்க் கொண்டுள்ள நிலையில் எச். ராஜா ஒரு பகீர் டிவீட்டை போட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில்,  திமுக வின் ஆட்டம் இன்னமும் 48 மணி நேரம்தான். செந்தில் பாலாஜி இருக்கிறாரா? இருந்தால் காவிரி மருத்துவ மணையில் தான் உள்ளாரா என்கின்ற பல சந்தேகங்கள் தீர்க்கப்படும் நேரம் நெருங்கி விட்டது. தமிழக அரசின் கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வரும். ஆட்டம் முடிவிற்கு வருமா அல்லது ஆட்சியேவா? என்று கேட்டுள்ளார்.

எதை மனதில் வைத்து ராஜா இந்த டிவீட் போட்டுள்ளார் என்று தெரியவில்லை. ஆளுநர் தரப்பில் ஏதாவது பெரிய அதிரடி நடக்கப் போகிறதா.. ஆட்சியே முடியுமா என்று கேட்டுள்ளதால் மத்திய அரசு ஏதாவது திட்டமிட்டுள்ளதா அல்லது கோர்ட் மூலமாக ஏதாவது அதிரடி வரப் போகிறதா என்று தெரியவில்லை.

இந்த டிவீட் குறித்து திமுகவினரும், பாஜகவினரும் காரசாரமாக பதிலடி கொடுத்து உரையாடிக் கொண்டுள்ளனர். டிவீட் போட்டு தற்போது 10 மணி நேரமாகி விட்டது.. இன்னும் 38 மணி நேரம்தான் இருக்கு.. என்ன நடக்கப் போகுதோ.. பக் பக்குன்னுதான் இருக்கு நமக்கும்!