குருப்பெயர்ச்சி பலன்கள் 2024 : நம்பிக்கையும், கம்பீரமும் கொண்ட.. தனுசு ராசிக்கு எப்படி இருக்கு ?

Aadmika
Mar 31, 2024,02:41 PM IST

இறை நம்பிக்கையும்.. கம்பீரமான தோற்றமும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!! இதுவரை புத்திர ஸ்தானமான ஐந்தாம் ராசியில் இருந்த குரு பகவான் சித்திரை மாதம் 18ம் (01.05.2024) நாள் முதல் சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.


சத்ரு ஸ்தானத்தில் இருக்கின்ற குரு தான் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியான தொழில் ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியான போக ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியான குடும்ப ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.


குருவின் பார்வை பலன்கள்:


குரு ஐந்தாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். அரசு வழியில் சில உதவிகள் கிடைக்கும். சொந்த ஊர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடிவரும். கௌரவ பொறுப்புகளின் மூலம் வெளிவட்டாரத்தில் மதிப்புகள் உயரும்.


குரு ஏழாம் பார்வையாக போக ஸ்தானத்தை பார்ப்பதால் உடலில் இருந்துவந்த மந்தத்தன்மைகள் படிப்படியாக குறையும். எந்தவொரு செயலையும் ரகசியமாக செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். பழக்கவழக்கங்களில் சற்று கவனம் வேண்டும். வெளிநாடு செல்வது தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும்.


குரு ஒன்பதாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த விதத்தில் உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். தனவரவுகளில் இருந்துவந்த தடைகள் விலகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.




குரு நின்ற பலன்:


குரு புத்திர ஸ்தானத்தில் நிற்பதால் தந்தை வழி உறவினர்களிடத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நன்மதிப்பை உண்டாக்கும். எதிலும் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்வது மனஅமைதியை ஏற்படுத்தும். இழுபறியான சில விஷயங்களை செய்து முடிப்பதற்கான சூழல் ஏற்படும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்ப்பது நல்லது.


குருபகவானின் நட்சத்திர பாத சஞ்சார பலன்கள்:


குரு 01.05.2024 முதல் 11.06.2024 வரை கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், உத்தியோகப் பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும்.


குரு 12.06.2024 முதல் 18.08.2024 வரை மற்றும் 12.02.2025 முதல் 04.04.2025 வரை ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்ட வரவுகள் கிடைக்கும். வியாபாரப் பணிகளில் சிறு சிறு தேக்க நிலைகள் உண்டாகும். உறவினர்களிடத்தில் பொறுமையுடன் செயல்படுவது நன்மதிப்பை உண்டாக்கும்.


குரு 19.08.2024 முதல் 14.10.2024 வரை மற்றும் 05.04.2025 முதல் 10.05.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், குழந்தைகளிடத்தில் பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும்.


குரு 15.10.2024 முதல் 11.02.2025 வரை வக்ர சஞ்சாரம்:


கொடுக்கல், வாங்கலில் லாபம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த சுபகாரியங்கள் கைகூடி வருவதற்கான சூழல் ஏற்படும்.


குரு பெயர்ச்சியால் உண்டாகும் பொதுவான பலன்கள்:


பெண்கள்:


தனவரவில் இருந்துவந்த சில நெருக்கடிகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை உண்டாகும். உங்கள் கருத்துகளுக்கு உண்டான ஆதரவு கிடைக்கும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த சில நெருக்கடிகள் குறையும்.


மாணவர்கள்:


மாணவர்களுக்கு சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் வேண்டும். தொழில் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்தோடு இருக்கவும். பிறமொழி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். 


உத்தியோகஸ்தர்கள்:


அலுவலகத்தில் எதிர்பார்த்த சில பொறுப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கையில் சில மாற்றங்கள் உண்டாகும். எதிலும் திறமையோடு செயல்பட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். புதிய வேலை சார்ந்த தேடலில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பயணங்களின் மூலம் அனுகூலமும், லாபமும் ஏற்படும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும்.


வியாபாரிகள்:


வியாபாரப் பணிகளில் இருந்துவந்த மந்தநிலைகள் நீங்கி முன்னேற்றமான சூழல் ஏற்படும். அரசு வழியில் சில உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு சில மாற்றங்களை செய்வீர்கள்.


கலைஞர்கள்:


கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். மனதளவில் இருந்துவந்த தயக்கங்கள் படிப்படியாக குறையும். பேச்சுத் திறமைகளின் மூலம் ஆதாயத்தை மேம்படுத்துவீர்கள். பயணங்களின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.


அரசியல்வாதிகள்:


நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். மறைமுக திறமைகளின் மூலம் எதிராக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். 


நன்மைகள்:


நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியில் தொழில் சார்ந்த அபிவிருத்தியும், அதற்கான தனவரவுகளும், குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பால் மேன்மையும் உண்டாகும்.


கவனம்:


நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியில் சஞ்சலமான சிந்தனைகளால் நெருக்கமானவர்களிடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.


வழிபாடு:


நவகிரகத்தில் இருக்கக்கூடிய குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர உடல் ஆரோக்கியமும், கல்வியில் முன்னேற்றமும் ஏற்படும்.