குருப்பெயர்ச்சி பலன்கள் 2024 : கும்ப ராசிக்காரர்களே.. சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுக்கவும்!

Aadmika
Apr 01, 2024,11:18 AM IST

எந்த சூழ்நிலையிலும் நிதானமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்ளும் கும்ப ராசி அன்பர்களே..!! இதுவரை சகோதர ஸ்தானமான மூன்றாம் ராசியில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 18ம் (01.05.2024) நாள் முதல் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.


சுக ஸ்தானத்தில் இருக்கின்ற குரு தான் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியான அஷ்டம ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியான தொழில் ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியான போக ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.


குருவின் பார்வை பலன்கள்:




குரு ஐந்தாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் எந்தவொரு செயலையும் மேற்கொள்ளும்பொழுது சூழ்நிலை அறிந்து முடிவெடுக்கவும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். மறைமுகமான வருமானங்களால் கையிருப்புகள் அதிகரிக்கும். மற்றவர்கள் மீதான கோபங்களை குறைத்துக் கொள்வது உங்கள் மீது நன்மதிப்பை ஏற்படுத்தும்.


குரு ஏழாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தந்தை வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரங்களில் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் உண்டாகும். உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் தெளிவுகள் ஏற்படும். எந்தவொரு செயலையும் நேர்மறை சிந்தனையுடன் அணுகி வெற்றியடைவீர்கள்.


குரு ஒன்பதாம் பார்வையாக போக ஸ்தானத்தை பார்ப்பதால் வாழ்க்கைத் துணைவரின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். புதுவிதமான பயணங்களை மேற்கொண்டு மனம் மகிழ்வீர்கள். மற்றவர்கள் பற்றிய தனிப்பட்ட விஷயங்களை அறிவதில் ஆர்வம் ஏற்படும். கடன் சார்ந்த நெருக்கடிகளை குறைப்பீர்கள்.


குரு நின்ற பலன்:


குரு சுக ஸ்தானத்தில் நிற்பதால் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். வர்த்தகம் தொடர்பான செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். நறுமண பொருட்களின் விஷயத்தில் சற்று கவனம் வேண்டும். உறவுகளின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். தொழில் சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளால் மாற்றங்கள் ஏற்படும்.


குரு 01.05.2024 முதல் 11.06.2024 வரை கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், சுபகாரியம் தொடர்பான விரயங்கள் உண்டாகும். எதிர்பார்த்த சில வரவுகளில் தாமதங்கள் ஏற்படும். உணவு விஷயங்களில் சற்று கவனத்தோடு இருக்கவும். பயணங்களில் தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே புரிதல்கள் ஏற்படும்.


குரு 12.06.2024 முதல் 18.08.2024 வரை மற்றும் 12.02.2025 முதல் 04.04.2025 வரை ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், உடல் ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். உறவினர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். மனை மீதான கடன் சார்ந்த உதவிகள் சிலருக்கு சாதகமாகும். உத்தியோக மாற்றம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது.


குரு 19.08.2024 முதல் 14.10.2024 வரை மற்றும் 05.04.2025 முதல் 10.05.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், உடன் பிறந்தவர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். புதிய தொழில்நுட்ப கருவிகளை கையாளுவதில் கவனம் வேண்டும்.


குரு 15.10.2024 முதல் 11.02.2025 வரை வக்ர சஞ்சாரம்:


நெருக்கடியாக இருந்துவந்த சில பிரச்சனைகள் குறையும். கால்நடை வளர்ப்புகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வாகன பயணங்களின் மூலம் புதிய அனுபவமும், ஆதாயமும் ஏற்படும்.


குரு பெயர்ச்சியால் உண்டாகும் பொதுவான பலன்கள்:

பெண்கள்:


சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பதற்கான சூழல் ஏற்படும். வியாபாரப் பணிகளில் மேன்மை உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. நெருக்கமானவர்களிடத்தில் அதிக உரிமை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவமும், அனுகூலமும் உண்டாகும். சொந்த ஊர் தொடர்பான பயணங்களால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். காப்பீடு விஷயங்களில் ஆதாயம் ஏற்படும்.


மாணவர்கள்:


மாணவர்களுக்கு பாடங்களில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். பெற்றோர்களிடத்தில் மனம் விட்டு பேசுவது மனதிற்கு அமைதியை கொடுக்கும். எதிர்பாராத சில பயணங்களால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். 


உத்தியோகஸ்தர்கள்:


உத்தியோகப் பணிகளில் திருப்தியான சூழல் அமையும். முயற்சிக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். உடல்நிலையில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஆதரவுகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். எதிர்பாராத சில இடமாற்றங்களால் அலைச்சல்கள் உண்டாகும்.


வியாபாரிகள்:


வியாபாரப் பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பதற்கான சூழல் உண்டாகும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வேலையாட்களின் மறைமுக ஆதரவுகளால் சில புரிதல்கள் ஏற்படும். அபிவிருத்தி தொடர்பான இலக்குகள் பிறக்கும்.


கலைஞர்கள்:


கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பிறமொழி சார்ந்த விஷயங்களில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் உண்டாகும். உணவுத்துறைகளில் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். வருமான வாய்ப்புகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும்.


அரசியல்வாதிகள்:


அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான சூழலும், வாய்ப்புகளும் உண்டாகும். வித்தியாசமான அணுகுமுறைகளின் மூலம் ஆதரவுகளை மேம்படுத்துவீர்கள். தொண்டர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும்.


நன்மைகள்:


நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியில் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பணிகளை, உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.


கவனம்:


நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியில் உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களிலும், பயணங்கள் தொடர்பான விஷயங்களிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது.


வழிபாடு:


வியாழக்கிழமைதோறும் மகான்களை வழிபாடு செய்துவர குடும்பத்தில் ஒற்றுமையும், சேமிப்பும் அதிகரிக்கும்.