பிரதமர் மோடியின் கல்வி சான்றிதழ் கேட்ட கெஜ்ரிவால்: ரூ.25,000 அபராதம் விதித்த கோர்ட்!

sahana
Mar 31, 2023,07:56 PM IST

அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், குஜராத் உயர்நீதிமன்றம் ‛பிரதமரின் கல்வி விவரங்களை வெளியிட தேவையில்லை’ எனக் கூறியதுடன், கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

 

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களில் தெளிவான பதில்கள் இல்லை என காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. அதில் குறிப்பாக அவர் ரயில் நிலையத்தில் டீ விற்றதாகவும், கல்லூரி பட்டம் பெற்றதாகவும் கூறியதற்கு ஆதாரம் இல்லை என அக்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. பிரதமர் மோடி, இளங்கலையில் தேர்ச்சி பெற்றதாகக் கூறப்படுகிறது. 


இதற்கு சான்று இல்லை என கூறிவரும் ஆம்ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் தேர்ச்சி பெற்றதாக கூறப்படும் ஆண்டில் பி.ஏ., படித்த அனைத்து மாணவர்களின் தேர்வு முடிவுகளையும் அவர்களின் பெயர், எண் ஆகியவற்றையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரி இருந்தார். ஆனால், கேட்கப்பட்ட தகவல் மூன்றாம் தரப்பினருடையது எனக் கூறி அதை அளிக்க டில்லி மற்றும் குஜராத் பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் பதிலளிக்க மறுத்துவிட்டனர். 


இதனை தொடர்ந்து, மத்திய தகவல் ஆணையத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார். அதற்கு மத்திய தகவல் ஆணையம், ‛முன்னாள் அல்லது இந்நாள் மாணவரின் கல்வி தொடர்பான விவரங்கள் அனைத்தும் பொதுவெளியின் கீழ் வருகிறது. எனவே, கேட்கப்பட்ட தகவல்களை வழங்கமாறு’ உத்தரவிட்டது.


இதனை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் குஜராத் பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்தது. தொடர் விசாரணையில் இருந்துவந்த இந்த வழக்கில், இன்று (மார்ச் 31), பிரதமர் மோடியின் கல்வி விவரங்களை வெளியிட தேவையில்லை எனக்கூறி மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்தது. அத்துடன் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்தது குஜராத் உயர்நீதிமன்றம்.