அப்பாடா.. ஒருவழியா.. கூடலூர் சிறுத்தையை.. கொண்டு வந்து வண்டலூர் ஜூவில் அடைச்சாச்சு!

Manjula Devi
Jan 08, 2024,06:15 PM IST

சென்னை: நீலகிரியில் பிடிபட்ட சிறுத்தை இன்று பத்திரமாக கொண்டு வரப்பட்டு, வண்டலூர் உயிரியல் பூங்காவில் வனத்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.


நீலகிரி பந்தலூரில் சிறுத்தை நடமாட்டம் இருந்து வந்தது. கடந்த 6ஆம் தேதி மேங்கோ ரேஞ்ச் பகுதியில் சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிறுத்தை சிறுமியை இழுத்துக்கொண்டு தோட்டத்திற்குள் சென்றது.  அந்த  சிறுமியை கொடூரமான முறையில் கடித்துக் குதறியது சிறுத்தை. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்தனர். 


படுகாயம் அடைந்த வட மாநிலத் தொழிலாளர் தம்பதியின் மகளான அந்த  சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்க்க பொதுமக்கள் சென்ற நிலையில்,  குழந்தையை பாதி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தது. கடந்த 21ஆம் தேதி பழங்குடியின இனத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சிறுத்தை தாக்கி உயிரிழந்தார்.




சிறுத்தை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை வழங்கியது. இறந்த குழந்தையின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல தமிழக அரசு ஏற்பாடும் செய்தது.


அடுத்தடுத்து இரு உயிர்கள் பறி போனதால் கொதிப்படைந்த மக்கள் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிக்கும் பணிகளை முடுக்கி விட்டனர். கும்கி யானை வரவழைக்கப்பட்டு அதன் உதவியுடன் சிறுத்தை கண்டுபிடிக்கப்பட்டு மயக்க ஊசி போட்டு அதை பத்திரமாக பிடித்து விட்டனர்.


முதலில் அதை முதுமலை காப்பகம் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த பின்னர் இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குக் கொண்டு வந்தனர். அங்கு பாதுகாப்பான இடத்தில் சிறுத்தை விடப்பட்டுள்ளது. அதற்கு தொடர் சிகிசிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.