சாதனையை முறியடித்து.. உச்சம் தொட்ட பிரக்ஞானந்தா.. சபாஷ் போட்ட சச்சின்.. குவியும் வாழ்த்துகள்!

Meenakshi
Jan 17, 2024,05:02 PM IST

தி ஹேக்: முந்தைய சாதனையை முறியடித்து புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா. இந்தியாவின் நம்பர் 1 வீரராக சாதனையும் படைத்துள்ளார். அவருக்கு சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


செஸ் போட்டி என்றாலே நாம் அனைவருக்கும் முதலில் ஞாபகத்திற்கு வருபவர் தான் விஸ்வநாதன் ஆனந்த். தமிகத்தை சேர்ந்த அவர் செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றவர். அது மட்டுமின்றி பல வருடங்களாக நம்பர் 1 இடத்தில் இருந்து வந்தவரும் அவரே. அவருக்கு அடுத்தபடியாக செஸ்சில் பலரும் முண்டியடித்துக் கொண்டு வந்தாலும் விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை முறியடிக்க முடியவில்லை.


கடந்தாண்டு 17 வயதான செஸ் வீரர் குகேஷ் முதலிடத்திற்கு வந்தாலும் அவரால் அந்த இடத்தில் நீடித்து நிற்க முடியவில்லை.  இந்நிலையில் இந்தியாவின் நம்பர் 1 வீரராக  பிரக்ஞானந்தா புதிய உச்சம் தொட்டுள்ளார். நெதர்லாந்தில் நடந்து வரும் டாடா ஸ்டீம் மாஸ்டர்ஸ் தொடரின் 4வது சுற்றில், உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனை வீழ்த்தி சாதனை படைத்ததன் மூலம் இந்த புதிய உச்சத்தைத் தொட்டார் பிரக்ஞானந்தா. 




இப்போட்டியில் வென்றதன் மூலம் இந்திய செஸ் வீரர் விஸ்வநாத ஆனந்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை  பிரக்ஞானந்தா பிடித்துள்ளார். விஸ்வநாதன் ஆனந்த் 2748 புள்ளிகள் பெற்று முன்னிலையில் இருந்த நிலையில் இளம் வீரர் பிரக்ஞானந்தா 2748.3 புள்ளிகள் எடுத்து விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளியுள்ளார். 


புதிய உச்சம் தொட்டுள்ள பிரக்ஞானந்தாவுக்கு சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல்வேறு வீரர்களும், தலைவர்களும் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலியும் செஸ் விளையாட்டு வீராங்கனை தான். சமீபத்தில் தான் அர்ஜூனா விருதை வைஷாலி பெற்றார் என்பது நினைவிருக்கலாம்.