எண்ணூர் கோரமண்டல் உர ஆலையை திறக்க.. தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

Manjula Devi
May 21, 2024,04:53 PM IST

சென்னை:  எண்ணூர் கோரமண்டல் உர ஆலையில் ஏற்பட்ட வாயுக் கசிவால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு பின்னர் மூடப்பட்ட நிலையில், அந்த ஆலையை மீண்டும் திறக்க தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் இன்று உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், ஆலையை திறக்க பல நிபந்தனைகளையும் விதித்துள்ளது.


கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி எண்ணூரில் செயல்பட்டு வந்த கோரமண்டல் உர ஆலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இந்த அமோனியா வாயு கசிவால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்றவற்றால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.




இதனைதொடர்ந்து எண்ணூர் கோரமண்டல் ஆலையை மூட வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆலையை தற்காலிகமாக மூட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.  இங்கு நேரடியாகப் பணியாற்றும் சுமார் 850 தொழிலாளர்கள் மற்றும் மறைமுகமாக பணியாற்றும் சுமார் 2,000 பேருக்கு இந்த ஆலையே வாழ்வாதாரமாக உள்ளதாகவும், அதனால் இந்த ஆலையை திறக்க வேண்டும் எனவும் தொழிலாளர்கள் அண்மையில் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். 


இது தொடர்பாக  தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த தீர்ப்பாயம், எண்ணூர் கோரமண்டல் ஆலையை திறக்கலாம் என்று இன்று உத்தரவிட்டுள்ளது. ஆலை நிர்வாகத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் அறிவித்து உள்ளது.


அதன்படி, தமிழ்நாடு  நிபுணர் குழு வழங்கிய அரசு அறிவுரைகளை ஆலை நிர்வாகம் பின்பற்ற வேண்டும். மாசுகட்டுப்பாட்டு வாரியம் நிபுணர் குழுவின் அனுமதியுடன் தடையில்லா சான்றிதழ் பெற்று ஆலையை திறக்க வேண்டும். ஆலையை இயக்கும் முன்பாக கடல் சார் வாரியம், தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்கத்திடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.