புயல் போய்ருச்சுன்னு சொல்ற வரைக்கும் வெளியில் வராதீங்க.. மக்களுக்கு காவல்துறை அறிவுரை

Su.tha Arivalagan
Dec 02, 2023,07:10 PM IST

சென்னை: மிச்சாங் புயல் வீசும் சமயத்தில் மக்கள் வீடுகளுக்குள் இருக்க வேண்டும். புயல் கரையைக் கடந்தது என்ற தகவல் வரும் வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரக் கூடாது என்று சென்னை மாநகர காவல்துறை மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.


மிச்சாங் புயல் நாளை உருவாகவுள்ளது. இந்தப் புயலானது டிசம்பர் 4 அல்லது 5ம் தேதியன்று கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயலையொட்டி அரசு நிர்வாகங்கள், அனைத்துத் துறைகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 


காவல்துறை அறிவுரை


சென்னை மாநகர காவல்துறை, மாநகராட்சி, உள்ளாட்சித் துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை என்று அனைவரும் ஒருங்கிணைந்து பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை காவல்துறை மக்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவுரைகள் வருமாறு.




தென்மேற்கு வங்கக் கடலில் டிசம்பர் 3-ம் தேதிக்குள் ‘Michaung’ புயல் உருவாகும் என்று கணித்துள்ளது.


இந்த சூறாவளி டிசம்பர் 4, திங்கட்கிழமை 100 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதோடு, நெல்லூர் மற்றும் மச்சிலிப்பட்டினம் இடையே வட தமிழகக் கடற்கரையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் பிற மாவட்டங்களுக்கு கனமழையைக் குறிக்கும் 'ஆரஞ்சு' எச்சரிக்கையை IMD விடுத்துள்ளது.


மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் IMD அறிவுறுத்தியுள்ளது.


நீங்கள் சென்னை அல்லது அருகிலுள்ள பகுதிகளில் இருந்தால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும். அவசரத்திற்கு 100க்கு அழைக்கவும்.


வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை:


வாகனங்களை மெதுவாக ஓட்டவும், கவனமாக செல்லவும்.

பிரேக் சரியாக இயங்குகிறதா என்பதை பரிசோதித்த பின்னர் வண்டிகளை எடுக்கவும்.

தண்ணீர் அதிகம் தேங்கியுள்ள சாலைகள், தெருக்களில் வாகனங்களை ஓட்டாதீர்கள்.

கார் வைப்பர்கள் சரியாக இயங்குகின்றனவா என்பதை சோதித்துக் கொள்ளுங்கள்

பாதுகாப்பான தூரத்தைக் கடைப்பிடிக்வகும்

சாலையை விட்டு இறங்கி வாகனங்களை ஓட்டுவதைத் தவிர்க்கவும்.

மரங்களுக்கு கீழே வாகனங்களை நிறுத்தாதீர்கள்.

முன்கூட்டியே பயணங்களைத் திட்டமிடவும்

வானிலை தொடர்பான உரிய அறிவுறுத்தல்கள், எச்சரிக்கைகளைப் பின்பற்றுங்கள்

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்பாதீர்கள்.


தயார் நிலையில் பேரிடர் மீட்புப் படையினர்:


மறுபக்கம் சென்னையில் மாவட்ட பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அந்த ஏற்பாடுகளை  சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை ராஜரத்தினம் போலீஸ் ஸ்டேடியத்தில் இவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.


சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படையினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்குமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 


காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:




காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அவசர கால செயல்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையமானது 24 மணி நேரமும் இயங்கும். துணை கமிஷனர் தலைமையில் இது இயங்கும்.

மீட்பு நடவடிக்கைகளில் அனைத்துப் பிரிவு காவல்துறையினரும் ஈடுபடுத்தப்படுவர்.

சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, சிறப்புப் பிரிவுகளைச் சேர்ந்த 18,000 போலீஸார் சுற்று முறையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இவர்கள் தவிர 2000 ஊர்க்காவல் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

போக்குவரத்துப் பணிகளை  மேற்பார்வையிட்டு முறைப்படுத்துவதற்காக கூடுதலாக 2500 போலீஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும் 200 ஆயுதப் படைப் போலீஸாரும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மீட்புப் பணியில் 100 டிராபிக் வார்டன்களும் பணியில் அமர்த்தப்படவுள்ளனர்.


மாநகர போக்குவத்துக் கழகம், மெட்ரோ ரயில், நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம், சுகாதாரத் துறை, தீயணைப்புத் துறையினருடன் இணைந்து காவல்துறை பணியாற்றவுள்ளது.


பல்வேறு துறையின் ஒருங்கிணைப்பை சரியாக செய்வதற்காக வாட்ஸ் ஆப் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் மீட்புப் பணிகள் தொய்வின்றி நடப்பது உறுதி செய்யப்படும்.


மிகவும் தாழ்வான பகுதிகள், கால்வாய்கள், மழை நீர் தேங்கும் பகுதிகளில் மீட்புப் பணிகளை விரைவுபடுத்த முன்னுரிமை தரப்படும்.. அங்கு 24 மணி நேர கண்காணிப்பும் மேற்கொள்ளப்படும்.


பழுதடைந்த மின் கம்பங்கள், மின் பெட்டிகளை கண்காணிக்குமாறு மின்வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.




அனைத்து காவல் நிலைய ரோந்து வாகனங்களும் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனைத்தும் ஆயத்த நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து பட்ரோல் வாகனங்கள், புயல் மற்றும் வெள்ளம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் முதலுதவிப் பெட்டிகள், டார்ச் லைட், கயிறு, வாட்டர் பாட்டில்கலை இருப்பு  வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


வடக்கு மற்றும் தெற்கு மண்டலத்தில் உள்ள போலீஸ் மருத்துவமனையிலிருந்து மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்படும்.


ஆம்புலன்ஸ்கள், மீட்பு வாகனங்கள் விரைவாகவும், தடங்கல் இல்லாலும் செல்லும் வகையில் தனி பாதைகள் முக்கியச் சாலைகளில் ஏற்படுத்தப்படும்.


கடற்கரைக்குச் செல்லாதீர்கள்:




பொது இடங்கள், தனியார் இடங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர போர்டுகள், பிளக்ஸ் பேனர்களை கண்காணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 


சுரங்கப் பாதைகளுக்குள் சிக்கிக் கொள்ளும் வாகனங்களை வெளியில் கொண்டு வருவதற்காக மாநகர போக்குவரத்துக் கழகத்திடம் 2 மீட்பு வாகனங்கள் பெறப்பட்டுள்ளன.


சூழ்நிலைக்கேற்ப போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும். அதை பொதுமக்கள் கவனித்தும் பின்பற்றியும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.


கடற்கரைகளுக்குச் செல்வது, கடல் அருகே செல்வது போன்றவற்றை பொதுமக்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்


பொதும்கள் கன மழை பெய்யும்போதும், பலத்த காற்று வீசும்போதும் வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும். பொதுப் போக்குவரத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும். இடி மின்னல் சமயத்தில் மின்சார சாதனங்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.