"திமிரைப் பாரேன் அவளுக்கு.. சரி நீங்க போய்ட்டு சீக்கிரம் வாங்க".. (கெளதமியின் காதல் -10)

Su.tha Arivalagan
Feb 12, 2024,06:20 PM IST

- சுதா. அறிவழகன்


"குமார்.. ஹாஸ்ப்பிட்டலுக்கு போன் வந்திருக்கு.. என் கிட்ட பேசினது மாதிரியே பார்வதிக்கு கால் வந்திருக்கு"


"அதே ஆளா?"


"இல்லையாம்.. ஒரு பொண்ணு பேசிருக்கா.."


"பொண்ணா.. என்ன சொல்லுச்சாம்"


"தெரியலை.. நீ உடனே கிளம்பி ஹாஸ்பிட்டலுக்கு வான்னு கூப்பிடறா பார்வதி.. அவ குரலே சரியில்லை"


"இரு.. நானும் வர்றேன்"


குமார் ஏறிக் கொள்ள, பைக்கை ஹாஸ்பிட்டலுக்கு விரட்டினான் ஜார்ஜ்.  ஹாஸ்பிட்டல் வாசலில் வண்டி நுழையும்போதே, போர்ட்டிகோவில் பார்வதி தென்பட, பைக்கை பார்க் செய்யாமல் நேராக அவளிடமே சென்று நிறுத்தினான் ஜார்ஜ்.




"யார் போன் பண்ணா பாரு.. என்னாச்சு"


"தெரியலை.. ஒரு லேடி.. பேரு கூட சொல்லலை.. நவீன் உங்களுக்கு போன் பண்ணச் சொன்னார்.. உடனே கிளம்பி வாங்கன்னு சொன்னா. நான் நீங்க யாருங்க, எங்க வரச் சொல்றீங்க, நவீன் எங்கேன்னு கேட்டப்போ, திருவனந்தபுரம் வாங்க, வந்துட்டு இதே நம்பருக்கு கால் பண்ணுங்க.. வர வேண்டிய இடத்தைச் சொல்றேன்.. நவீனைப் பார்க்கலாம்னு சொல்லிட்டு வச்சுட்டா.. திரும்பக் கால் பண்ணா அட்டென்ட் பண்ணலை"


"யார்ரா இவனுங்கல்லாம்.. என்னடா இது குழப்பமா இருக்கு.. எதுக்கு இப்படி ஆளு மாத்தி ஆளு போன் பண்ணணும்.. நவீனுக்கும் இவங்களுக்கும் என்ன சம்பந்தம்.. இல்லை அவன் ஏதாச்சும் நம்மளை பயமுறுத்தறதுக்காக விளையாடுறானா.. பேசாம போலீஸுக்குப் போய்டலாமா.. கொஞ்சம் பயமா இருக்கே"


"இருடா.. டென்ஷன் ஆகாத.. பாரு, அந்தப்  பொண்ணு பேசுன நம்பருக்கு திரும்ப கால் பண்ணு"


பார்வதி அந்த நம்பருக்கு கால் பண்ண.. அது ஸ்விட்ச்ட் ஆப் என்று வந்தது.


"சரி.. கெளதமி எங்கே"


"இங்கதோன் இருக்கேன்".. பக்கத்திலிருந்து குரல் வரவே, ஜார்ஜும், குமாரும் பார்வையைத் திருப்ப.. ஓரமாக இருந்த சிமென்ட் இருக்கையில் கெளதமி சமைந்து போய் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து திடுக்கிட்டார்கள்.


"இவளுக்கு ஏண்டி சொன்ன".. பார்வதியிடம் கோபமாக கேட்டான் ஜார்ஜ்.


"இவளை டாக்டர் கிட்ட விட்டுட்டு மெடிக்கல் போலாம்னு வெளியே வந்தேன். அப்பத்தான் கால் வந்தது. சரியா வாய்ஸ் கேக்கலையேன்னு மைக்ல போட்டேன்.. பின்னாடியே வந்திருப்பா  போல..  நின்னு புல்லா கேட்டுட்டா.. அவ வந்ததை நான் கவனிக்கலை"


"ஜார்ஜ் அண்ணா.. நானும் வர்றேன்.. உடனே கிளம்பிப் போலாம்.. எனக்கு பயமா இருக்கு.. அவருக்கு என்னமோ ஆயிருச்சு.. தயவு செஞ்சு என்னையும் கூட்டிட்டுப் போங்க"


"கெளதமி போலீஸுக்குப் போயிரலாம்.. மேட்டர் சீரியஸா தெரியுது"


"வேண்டாம்ண்னா.. அவரோட  உயிருக்கு  ஏதாவது ஆபத்தா போயிரும்.. கூப்பிடறாங்கன்னா ஏதாவது டிமாண்ட் இருக்கலாம்ல.. போய்ப் பார்த்துடலாம்.. ப்ளீஸ் லேட் பண்ணாதீங்க.. யாரும் எந்த செலவும் பண்ண வேண்டாம்.. எல்லாத்தையும் நானே பாத்துக்கிடறேன்.. உடனே கிளம்பலாம்.. ப்ளீஸ்".. உடைந்து அழுதாள் கெளதமி.


"முட்டாள் மாதிரி பேசாதம்மா.. உனக்கு முன்னாடியே அவன் எங்களுக்கு உறவானவன்.. பணத்தைப் பத்தி இப்ப யாரு பேசினா.. பாரு, நீயும் வர்றியா"..  கெளதமியை கடிந்தபடியே, பார்வதியிடம் திரும்பி ஜார்ஜ் கேட்க, அவளும் சரி என தலையாட்டினாள்.


"பட் இவ இப்ப இருக்கிற உடம்புக்கு உடனே கிளம்பிப் போனா இவளுக்கு ஏதாவது ஆயிரும்.. ஒரு நாள் வெயிட் பண்ணிட்டுப் போலாமா" பார்வதி கேட்டதும் சரியெனவே பட்டது.


"இல்லடி.. எனக்கு ஒன்னும் ஆகாது..  நாம போலாம்.. அதான் டேப்ளட் இருக்கே.. கார் புக் பண்ணிக்கலாம்.. டேப்ளட் போட்டு நான் படுத்துக்கறேன்.. போய்ச் சேர்றதுக்குள்ள சரியாய்டுவேன்.."


"எங்க போய் சேர்றதுக்குள்ள" பாரு கிண்டலாக கேட்க.. கேலி பண்ணாதடி என்று அவளது தோளில் சாய்ந்து கொண்டாள் கெளதமி.


அடுத்த சில நிமிடங்களில் அனைவருமே பார்வதி வீட்டில் இருந்தனர்.  தனக்கும் கெளதமிக்கும் தேவையான பொருட்களை பார்வதி எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.


அவளது அப்பாவுடன் ஜார்ஜும், குமாரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.


"நீங்க போறதெல்லாம் சரிதான்.. பட்.. இதை போலீஸுக்குச் சொல்லாம நீங்களா எப்படிப்பா டீல் பண்ண முடியும்.. பிராப்பரா போறதுதானே நல்லது.. ஏன் அதுக்கு தயங்கறீங்க"


"இல்லை சார்.. கெளதமி பயப்படறா.. நவீனோட லைப்க்கு ஏதாவது ரிஸ்க் ஆயிடுமோன்னு பயப்படறா.. எங்களுக்கும்தான்"


"அப்படில்லாம் ஆகாதுப்பா.. ஓகே... எனிவேஸ்.. பத்திரமா போய்ட்டு வாங்க.. என்னோட நண்பர் ஒருத்தர் கேலிகட்ல இருக்கார்.. நம்பர் கொடுக்கறேன்.. தேவைப்பட்டா பேசிக்கங்க.. பட் அவர் நேர்ல வருவாரான்னு என்னால உறுதியா சொல்ல முடியாது.. ஏதாவது கைட் பண்ணலாம்.. யூஸ் ஆகும்"


"பரவாயில்லை சார்.. நம்பர் வச்சுக்கறோம்.. தேவைன்னா மட்டும் கால் பண்றோம்.. தேவையில்லாம தொந்தரவு  பண்ண வேண்டாம் அவரை"


"இட்ஸ் ஓகே"


பார்வதி ஹாலுக்கு வர.. " நீங்க ரெடியாகி இருங்க.. நாங்க வீட்டுக்குப் போய் சொல்லிட்டு கிளம்பி வந்துர்றோம்.. வந்ததும் கிளம்பலாம்" என்று எழுந்தான் ஜார்ஜ். குமாரும் அவனும் வெளியே வர பின்னாடியே வந்தாள் பார்வதி.


"ஜார்ஜ்.. நாம கரெக்டாதானே போறோம்.. போலீஸ் வேண்டாமா?"


"இவ பிடிவாதம் பிடிக்கிறாளே.. என்ன பண்ண?"


"இல்லை.. என்னோட ஸ்கூல்மேட்டோட அப்பா டிடெக்டிவா இருக்கார்.. அவர் கிட்ட ஹெல்ப் கேக்கலாமா"


ஜார்ஜ் குமாரைப் பார்க்க.. அவனோ " Oh, yes" என்றான்.


"சரி இருங்க, இப்பவே அவருக்கு கால் பண்ணிப் பேசலாம்" என்று கூறியபடி செல்லை எடுத்து நம்பரை போட்டாள் பார்வதி. நம்பர் ஸ்விட்ச்ட் ஆப்.


"ஜார்ஜ் அண்ணா ரொம்ப குழப்பிக்காதீங்க.. நான் தெளிவா இருக்கேன்.. என்னைப் பத்தி பயப்படாதீங்க.. நாம போய் பார்த்துடலாம்.. இல்லாட்டிதான் எனக்கு ஏதாவது ஆய்டும்"


ஜன்னல் பக்கமிருந்து குரல் வர மூன்று பேரும் அந்தப் பக்கம் பார்க்க, கம்பிகள் மீது முகத்தைப் பதித்தபடி கெளதமி.


"அதான் போலாம்னு சொல்லியாச்சேடி.. நீ ஏண்டி இப்படி திடீர் திடீர்னு அசரீரி மாதிரி பேசிப் பேசியே எங்களை பயமுறுத்தற.. நீ ரிலாக்ஸா இரு.. போகத்தான் போறோம்" கடுப்பானாள் பார்வதி.


"அதுக்கில்லடி.. நீங்க ரொம்ப யோசிக்கறீங்க.. யோசிக்க யோசிக்க அவருக்கு ஆபத்து அதிகமாகிட்டே போகும்னு நான் பயப்படறேன் அவ்வளவுதான்"


"ரொம்ப யோசிக்காதம்மா.. உனக்கு ஏதாவது ஆயிடப் போகுது.. பிறகு உங்க அப்பா கிட்ட நாங்க பாட்டு வாங்கணும்"




"நான் அப்பாவுக்குப் போன் பண்ணி சொல்லிட்டேன்.. அவரும் ஷாக்காயிட்டார்.. உங்களை மாதிரியேதான் அவரும் என்னைப் போகாதே, ஜார்ஜும், குமாரும் போய்ட்டு வரட்டும்.. அவங்களுக்கு ஒன்னும் ஆகாட்டி நீ போகலாம்னு  சொன்னார்"


"என்னாது எங்களுக்கு ஒன்னும் ஆகாட்டின்னாவா.. அப்ப ஏதாவது ஆச்சுன்னா.."


"அப்படி இல்லன்னா.. லேடீஸ் போனா சிக்கலாய்டுமேன்னு அப்பா பயப்படறாங்க"


"நாங்களும் அதையேதான் சொன்னோம்.. லேடீஸ் வர வேண்டாம்.. நாங்க போய்ப் பார்க்கறோம்னு.. நீதான் கேட்கலை.. நீ மட்டும் வந்தா சரியா இருக்காதேன்னுதான் இவளையும் கூப்ட்டோம்.. இப்ப கூட கெட்டுப் போகலை.. ரெண்டு பேரும் இருங்க. நாங்க போய் பார்த்துட்டு அப்டேட் பண்றோம்.. என்ன சொல்ற"


"அண்ணா நீங்க சீக்கிரமா போய்ட்டு வாங்க.. கார் வந்துரும் இப்போ.." முகத்தை ஜன்னலிலிருந்து எடுத்துக் கொண்டு உள்ளே போய் விட்டாள் கெளதமி.


"திமிரைப் பாரேன் அவளுக்கு.. சரி நீங்க போய்ட்டு சீக்கிரம் வாங்கப்பா.. அவளை சமாதானப்படுத்தற நேரத்துல நாம திருவனந்தபுரத்துக்கே போய்ட்டு வந்துடலாம்.. கிளம்புங்க"


"சரி விடு..  ஆன் தி வேல கூட உன் பிரண்ட்டோ அப்பா கிட்ட பேசிக்கலாம்.. நாங்க போய்ட்டு வந்துர்றோம்.. நீங்க ரெண்டு பேரும் ரெடியா இருங்க"


"நான் காருக்கு சொல்லிட்டேன்.. 2 ஹவர்ஸ் கழிச்சு வரச் சொல்லிருக்கேன்.. நீங்க வர சரியா இருக்கும்"


"ஓகே.. வந்துர்றோம்.. டேய் ஏறுடா போலாம்"


பாரு உள்ளே செல்ல.. பைக் வெளியே சீறியது.


(தொடரும்)


Drawing: L.Jithesh Balan