கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை ரயில் நிலையத்துடன் இணைக்க.. 400 மீ. பாலம்.. வெளியானது டெண்டர்!

Manjula Devi
Jan 31, 2024,01:24 PM IST

சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துடன் ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க டெண்டர் கோரியுள்ளது தமிழக அரசு. இந்த ஆகாய நடைபாதை 400 மீட்டர் நீளத்தில் அமைக்கப்படுவதாகவும், இதனை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது.


சென்னை புறநகர் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தற்போது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனை அடுத்து பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் சென்னை போக்குவரத்துக் குழுமம் ஏற்பாடு செய்து வருகிறது.




அந்த வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் முன்பாக ரயில் நிலையம் அமைக்கும் பணியை தெற்கு ரயில்வே  தமிழக அரசின் நிதியிலிருந்து செய்து வருகிறது. தற்போது இந்த  ரயில் நிலையத்துடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை இணைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


அதன்படி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துடன் ரயில் நிலையத்தை இணைக்க ஆகாய நடைபாதை  அமைக்கப்படவுள்ளது. இது 400 மீட்டர் நீளத்தில் இருக்கும். இந்த ஆகாய நடைபாதை அல்லது ஸ்கைவாக் அமைக்க, தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.  ஆகாய நடைபாதை கிளாம்பாக்கம் மற்றும் ரயில் நிலையத்தின் மையப் பகுதியில் இருந்து 400 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட உள்ளது. இதில் நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின் தூக்கி வசதியுடன் நடைபாதைகள் அமைக்கப்பட உள்ளன. ஸோ, எங்கு வேண்டுமானாலும் இறங்கிக் கொள்ளலாம், ஏறிக் கொள்ளலாம்.


இந்தப் கட்டமைப்பு பணியினை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதைக்கான டெண்டர்

விண்ணப்பங்களை பிப்ரவரி 14-ஆம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது.