ஆளுநர் பதவியை விட்டு விட்டு.. தமிழ்நாடு பாஜக தலைவராகலாம் ரவி.. திருநாவுக்கரசர்

Su.tha Arivalagan
Jan 08, 2023,11:51 AM IST


புதுக்கோட்டை: தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்து பேச வேண்டியதையெல்லாம் ஆளுநர் பதவியில் அமர்ந்து கொண்டு ஆர். என். ரவி பேசுவது அழகல்ல என்று திருச்சி காங்கிரஸ் எம்.பி.யும், மூத்த காங்கிரஸ் தலைவருமான திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.


புதுக்கோட்டை ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் திருநாவுக்கரசர். அப்போது அவர் கூறியதாவது:




தமிழ்நாடு ஆளுநர் ரவியின் பேச்சு பாஜக தலைவருக்கு பொருத்தமான முறையில் உள்ளது. ஒரு  கட்சியன் தலைவராக இருந்து கொண்டு பேச வேண்டியதையெல்லாம் அவர் ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு பேசுகிறார். இது அழகல்ல. அவரை தமிழ்நாடு பாஜக தலைவராக மாற்றி விடலாம். 


தனித் தமிழ்நாடு என்ற கோரிக்கையை தற்போது உள்ள எந்தத் தலைவரும் சொன்னதில்லை, வலியுறுத்தியதும்இல்லை.  முன்பு அண்ணா சொன்னார்.. அது திராவிட நாடு கோரிக்கை, பின்னர் கைவிட்டு விட்டார். தமிழ்நாடு தற்போது இந்தியாவில் ஒரு மாநிலம். எனவே தமிழ்நாடு என்பதை பிரிவினைவாதமாக ஆளுநர் பார்ப்பது அவசியற்றது, தேவையற்றது.


அதிமுகவின் நிலை கவலைக்குரியதாக உள்ளது. அதை ஏதோ செய்யப் பார்க்கிறது பாஜக. உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு அதிமுக குறித்த ஒரு தெளிவு கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம்.


ஈரோடு கிழக்கு தொகுதி கடந்த முறை காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டு வென்ற தொகுதி. எனவே மீண்டும் காங்கிரஸே போட்டியிடும். அதற்குரிய அனுமதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. நிச்சயம் மீண்டும் வெற்றி பெறுவோம் என்றார் திருநாவுக்கரசர்.