10 மசோதாக்கள் நிறைவேற்றம்.. நாளை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு.. டெல்லி விரைகிறார் ஆளுநர் ஆர் என் ரவி!

Su.tha Arivalagan
Nov 19, 2023,12:10 PM IST

சென்னை:  தமிழ்நாடு ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களும் நேற்று சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட நிலையில், நாளை சுப்ரீம் கோர்ட்டில் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் நிலையில், ஆளுநர் ஆர். என். ரவி இன்று மாலை டெல்லி செல்கிறார்.


தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையிலான மோதல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ரவி எந்த மசோதாவுக்கும் ஒப்புதல் தர மறுக்கிறார். அரசின் செயல்பாடுகளை ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்கு செயல்படுகிறார் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.


இந்த வழக்கை நவம்பர் 10ம்  தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது. முடிவெடுக்க வேண்டும் அல்லது திருப்பி அனுப்ப வேண்டும். ஆளுநர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி கிடையாது என்று கூறி ஆளுநர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 20ம் தேதிக்கு அதாவது நாளைக்கு ஒத்திவைத்தது.




இந்த உத்தரவு வந்த பிறகு ஆளுநர் தன் வசம் நிலுவையில் இருந்த 10 மசோதாக்களை விளக்கம் கேட்டு தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பினார். ஆனால் அந்த பத்து மசோதாக்களையும் ஒரு புள்ளி, கமா கூட மாற்றாமல், நேற்று சட்டசபையைக் கூட்டி மீண்டும் தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது தமிழ்நாடு அரசு.


இந்த நிலையில் ஆளுநர் ஆர். என். ரவி இன்று மாலை 5 மணியளவில் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். நாளை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட வேண்டிய விளக்கம் தொடர்பாக அவர் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக டெல்லி செல்வதாக கூறப்படுகிறது.