ஆன்லைன் ரம்மி மசோதா.. தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி

Su.tha Arivalagan
Mar 09, 2023,09:11 AM IST
சென்னை: ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் சட்ட மசோதாவை கூடுதல் விளக்கம் கேட்டு தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர் ஆர். என்.ரவி.

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு பலரும் அடிமையாகி வருகின்றனர். வீட்டில், வெளியில், வேலை பார்க்கும் இடத்தில் என எங்கு பார்த்தாலும் இந்த ரம்மிக்கு அடிமையானவர்கள் அதிகம் உள்ளனர். ரம்மி சூதாட்டம் ஆடி லட்சக்கணக்கில் பணத்தை இழக்கும் பலர் தற்கொலை முடிவை நாடுகின்றனர். தமிழ்நாட்டில் இதுவரை ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் சிக்கி பணத்தை இழந்து 44 பேர் தற்கொலை செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவிக்கிறது.



இந்த சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்ததைத் தொடர்ந்து இந்த சூதாட்டத்தை தடை செய்வதற்காக சட்டமசோதாவை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. இந்த மசோதா கடந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.  ஆனால் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வந்த இந்த மசோதாவை தற்போது கூடுதல் விளக்கம் கேட்டு தமிழ்நாடு அரசுக்கே அனுப்பி வைத்துள்ளார் ஆளுநர் ஆர். என்.ரவி.

இதனால் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் நடவடிக்கைகள் மேலும் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆளுநரின் இந்த முடிவுக்கு பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழ்நாடு அரசு சட்டரீதியான போராட்டத்தை கையில் எடுக்க வேண்டும் என்றும் அவை கோரிக்கை விடுத்துள்ளன.