"அண்னே .. நல்லா அடிங்கண்ணே".. கேட்டு வாங்கிய யோகிபாபு.. கவுண்டமணி மீது அம்புட்டு பாசம்!

Su.tha Arivalagan
Jan 29, 2024,02:48 PM IST

- சங்கமித்திரை


சென்னை: ஒரு படத்தில் கவுண்டமணி வசனம் பேசுவார்.. "ரைட் சைட்.. ஆ லெப்ட் சைட்.. இப்போ சென்டர்".. திரும்பித் திரும்பிக் காட்டி சந்தனம் பூசிக் கொள்வது போல அந்தக் காமெடி காட்சி வரும்.. அதேபோல கவுண்டமணி என்னை நாலாபக்கமும் நல்லா அடிக்கணும் என்று சொல்லி சந்தோஷமாக நடித்துள்ளாராம் யோகிபாபு!


கவுண்டமணி என்றாலே அந்த டைமிங்கும், அவர் கொடுக்கும் கவுன்டர்களும், பளிச் பன்ச் டயலாக்குகளும்தான் டக்கென்று நினைவுக்கு வரும். அவரிடம் அடி வாங்காத நடிகர்களே கிடையாது.. எப்படியாவது டச்சிங் டச்சிங் பண்ணி  விடுவார்.. அப்பதானேங்க அவர் கவுண்டமணி!




கவுண்டமணி காமெடி ஸ்டைலை காப்பி அடிக்காத நடிகர்களே கிடையாது.. அடிதடி காமெடிக்கு காப்பிரைட்டே அவருக்கு எழுதிக் கொடுத்து விடலாம். அந்த அளவுக்கு அவரது ஸ்டைல் பிரபலமானது. இப்போது கவுண்டமணி புதிய படத்தில் அசத்தியுள்ளாராம்.


கவுண்டமணியுடன் இணைந்து அந்தப் படத்தில் கலக்கியுள்ளார் காமெடி நடிகர் யோகி பாபு. தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காமெடியில் கோலோச்சி வந்த நகைச்சுவை மன்னன் கவுண்டமணி. இன்று அவர் பெரிய அளவில் நடிக்கவில்லை என்றாலும் கூட கதை அம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து அவ்வப்போது நடிக்கத்தான் செய்கிறார். அப்படி அவர் நடித்து வரும் படம்தான் ஒத்த வீடு முத்தையா. இந்த படத்தில் கவுண்டமணி கதை நாயகனாக வருகிறார். அவருடன் முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார் யோகி பாபு.




இந்த படத்தை இயக்கியிருப்பவர் சாய் ராஜகோபால். இவர் வேறு யாரும் இல்லைங்க கவுண்டமணி, செந்தில் இரட்டையரின் பல புகழ் பெற்ற படங்களுக்கு நகைச்சுவை பார்ட்டை மட்டும் எழுதியவர்தான் ராஜகோபால். இவரது காமெடி டிராக் புகழ் பெற்றவை.  கவுண்மணி தவிர, விவேக், வடிவேலு ஆகியோருக்கும் கூட டிராக் எழுதியுள்ளார். 


கவுண்டமணிக்கு நூற்றுக்கணக்கான படங்களுக்கு நகைச்சுவை வசனம் எழுதிக் கொடுத்து கவுண்டமணி - செந்திலுக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்த அந்தக் காலத்து காமெடி வசனகர்த்தா தான் இப்போது இயக்குனராக அறிமுகம் ஆகிறார். இவரது முதல் படத்திலேயே கவுண்டமணி நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து இயக்குனர் சாய் ராஜகோபால் கூறுகையில், இந்த படத்தில் நடிக்க யோகி பாபு மிகவும் மகிழ்ச்சியாக ஒத்துக் கொண்டார். காரணம் அவர் கவுண்டமணியின் தீவிரமான ரசிகர். இந்த படத்தில் "எனக்கு அண்ணனுடன் அடி வாங்குவது போன்ற காட்சிகள் வேண்டும்" என்று என்னிடம் மிகவும் விரும்பி கேட்டு அப்படிப்பட்ட காட்சிகளை வைக்கச் சொல்லி அதில் அடி வாங்கி சந்தோஷமாக நடித்துக் கொடுத்தார்.


இதில் கவுண்டமணி ஒரு அரசியல்வாதியாக வருகிறார். ஒரு இடைத்தேர்தலில் அவர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து நிற்கும் வேட்பாளராக யோகி பாபு நடிக்கிறார். இவர்களுக்குள் நடக்கும் மோதல்கள் முட்டல்கள்தான் இந்த படத்தின் கதை. இதை காமெடி கலந்து சொல்லியுள்ளோம். தமிழ்நாட்டை ஒரு காலத்தில் பரபரப்பில் ஆழ்த்திய "தர்மயுத்தம்" குறித்தும் இந்த படத்தில் காட்சிகள் உள்ளது.




படத்தில் மொட்டை ராஜேந்திரன், சிங்கமுத்து உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் இன்னொரு முக்கியமான அம்சம் உள்ளது. பழம்பெரும் காமெடி நடிகர்களான நாகேஷ், மயில்சாமி, சிங்கமுத்து ஆகியோரின் வாரிசுகளும் இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் வருகிறார்கள். அதாவது நாகேஷ் அவர்களின் பேரன் கஜேஸ், இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் வருகிறார். அதேபோல மயில்சாமியின் மகன் அன்பு அவருக்கு ஒரு முக்கிய பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக் அவருக்கு ஒரு முக்கிய பாத்திரம் தரப்பட்டுள்ளது. வாசன் கார்த்திக் ஏற்கனவே ஹீரோவாக நடித்தவர். இந்தப் படத்தில் அவர் முக்கிய பாத்திரத்தில் வருகிறார். அவரது பாத்திரம் பேசப்படும் என்றார் அவர்.


இந்த படம் அரசியல் படம் என்பதில் சந்தேகம் இல்லை. நல்லவர்களை தேர்ந்தெடுங்க.. ஓட்டுப் போடுவதற்கு காசு கொடுக்காதீங்க, உங்களுடைய ஓட்டுகளை விற்காதீர்கள். இப்படி நல்ல கருத்துக்களை இந்த படத்துல சொல்லி இருக்காங்க. இந்த படம் தேர்தலுக்கு சமீபத்தில் வருவது மிக மிக பொருத்தமானதாக இருக்கும். கவுண்டமணியின் வசனங்கள் உலகப் புகழ் பெற்றவை. அதிலும் அரசியல் நக்கல், நையாண்டி களுக்கு அவர் பெயர் போனவர். அப்படிப்பட்ட ஒரு நடிகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக இந்த படத்தில் வருவது மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.




கூடவே யோகி பாபுவும் கவுண்டமணியும் காம்பினேஷன் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பும் அதிகமாகவே உள்ளது. படம் வரட்டும் பார்க்கலாம்.. "மணி பாபு" காம்பினேஷன்..  பட்டைய கிளப்புமா பட்டாசாக பொரிந்து தள்ளுமா என்பது அப்போது தெரியும்.