செமத்தியான மழை காத்திருக்கு.. குடையோடு ரெடியாகுங்க.. வெதர்மேன் தகவல்!

Su.tha Arivalagan
Aug 29, 2023,05:49 PM IST
சென்னை: தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அடுத்த ஒரு வாரத்திற்கு நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் கொடுமை சற்று தணிந்து அவ்வப்போது குளுமையை அனுபவிக்கும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைக்கிறது.

இந்த நிலையில் ஒரு ஹேப்பி நியூஸ் கூறியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் நல்ல மழைக்கான வாய்ப்பு கூடி வந்துள்ளது.  இடியுடன் கூடிய கன மழையையும் எதிர்பார்க்கலாம்.

கரூர், திருப்பூர், கோவை, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் கூட நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது. சில இடங்களில் 100 மில்லி மீட்டர் மழைக்கும் வாய்ப்பிருக்கிறது.

அடுத்த வாரம் தமிழ்நாடு முழுவதும் பரவலாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னைக்கும் மழை உண்டு. பாளையம்கோட்டைதான் கடந்த ஒரு மாதமாக வெப்ப பூமியாக திகழ்ந்து வந்தது. அங்கு அடுத்த சில நாட்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பம் குறையும்.

சென்னையில் ராத்திரி நேரத்து டமால் டுமீல் மழை தொடர வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இந்த அளவுக்கு மழை பெய்திருப்பது ஒரு சாதனைதான். சென்னையில் தென் மேற்குப் பருவ மழை பற்றாக்குறையைத்தான் விட்டுச் சென்றுள்ளது. அதை தற்போதைய மழை ஈடு கட்டி வருகிறது என்று கூறியுள்ளார் வெதர்மேன்.