புத்தகப் புழுக்களே.. கோலாகலமாக தொடங்கியது.. 47வது சென்னை புத்தகக் கண்காட்சி!

Manjula Devi
Jan 03, 2024,02:56 PM IST

சென்னை: சென்னையில்  47வது புத்தகக் கண்காட்சியை  விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.  இந்த  கண்காட்சி இன்று முதல் 21ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் விடுமுறை நாட்களில் புத்தகக் கண்காட்சி தொடங்குவது வழக்கம். இதில் முதன்மையானது சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி. தமிழ்நாடு முழுவதும் இது கவனம் ஈர்க்கும் நிகழ்வாகும். இந்ததக் கண்காட்சியை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கடைசி நேரத்தில் அதில் மாற்றம் செய்யப்பட்டு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


விழாவில் அமைச்சர்கள், சென்னை மேயர் பிரியா, நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   47வது சென்னை புத்தகக் கண்காட்சி சென்னை, நந்தனம் ஓ எம் சி ஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது. இன்று முதல் 21 ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெறும். 900 அரங்குகள் இம்முறை அமைக்கப்படவுள்ளன. கதைகள், நாவல்கள், இலக்கியம், அரசியல், வாழ்க்கை வரலாறு என ஆயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இங்கு இடம் பெற உள்ளன. இந்த முறை பென்குயின் போன்ற வெளிநாட்டு பதிப்பகங்களும் கண்காட்சியில் பங்கேற்கவுள்ளது.




எப்போது செயல்படும்:


இந்த புத்தகக் கண்காட்சி விடுமுறை நாட்களில் முற்பகல் 11 மணி முதல் இரவு 8.30 வரையிலும், வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடைபெற உள்ளது. இதன் நுழைவு கட்டணமாக 10 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


புத்தக விழாவில் ஏராளமான புதிய புத்தகங்கள் வெளியீட்டு விழா, கண்கவர் கலை நிகழ்ச்சிகள், பேச்சரங்குகள் உள்ளிட்டவை இடம் பெறவுள்ளன.