அச்சச்சோ.. இந்த ஊர்ல கோபி மஞ்சூரியன்  சாப்பிட முடியாது.. தடை பண்ணிட்டாங்க.. எங்கே தெரியுமா?

Meenakshi
Feb 06, 2024,09:49 AM IST

கோவா: கோபி மஞ்சூரியன்.. இந்தப் பெயரைக் கேட்டதுமே நாவில் எச்சில் ஊறும். அப்படி ஒரு சூப்பரான மொறுமொறுப்பான உணவு அது.. ஆனால் ஒரு மாநிலத்தில் இந்த சூப்பர் உணவுக்குத் தடை விதிச்சிருக்காங்க மக்களே!


சைவப்பிரியர்களின் ஏகோபித்த உணவு என்றால் அது தாங்க நம்ம கோபி மஞ்சூரியன். இதை பார்த்தாலே உச்சு கொட்ட வைக்கும் தன்மை உடையது. நடிகர்களுக்கு தான் ரசிகர்கள் பட்டாளம் என்று கிடையாது. இந்த கோபி மஞ்சூரியனுக்கும் என்று தனி ரசிகர்கள் இருக்க தான் செய்கிறார்கள். 


சிறந்த உணவுகளில் இந்தோ-சைனீஸ் கலப்பு உணவான கோபிக்கு முக்கிய இடம் உண்டு. சீன வம்சாவளியான இந்தியாவை சேர்ந்த சமையல் கலைஞர் நெல்சன் வாங் என்பவர் 1970ல் இந்திய கிரிக்கெட் கிளப்பில் உணவு சமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது இந்த புதுமையான உணவை  கண்டுபிடித்துள்ளார்.




உணவு ஆர்வலர்களின் விருப்ப உணவாக இருக்கும் இந்த கோபிமஞ்சூரியன் "டேஸ்ட் அட்லஸ்" எனும் ஆன்லைன் உணவு இதழ் பட்டியலிட்ட சைவ உணவுகளின் சிறந்த உணவு என்ற முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இப்படி பட்ட உணவிற்கு ஒரு நகரம் தடை விதித்துள்ளது. அது எந்த நகரம் தெரியுமா? அது நம்ம கோவா தாங்க. கோவா மாநிலத்தை சேர்ந்த மாபுசா நகரம் தாங்க கோபி மஞ்சூரியனுக்கு தடை விதித்துள்ளது. எதற்கு இந்த தடை அது தெரியுமா மக்களே.. கோபி மஞ்சூரியனில் சேர்க்கப்படும் செயற்கை நிறங்கள் மற்றும் சுகாதாரம்  தொடர்பான விசயங்களுக்காக தான் மாபுசா நகர நிர்வாகம் தடை விதித்துள்ளது.


இங்க மட்டும் இல்லங்க இந்த தடை.. கடந்த 2022ம் ஆண்டு ஸ்ரீ தாமோதர் கோவிலில் வாஸ்கோ சப்தா கண்காட்சியின் போது, கோவா மாநிலத்தின் மர்முகோவா முனிசிபல் கவுன்சிலுக்கு கோபி மஞ்சூரியன் விற்கும் ஸ்டால்களைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தல்களை உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது.