பாக்ஸ் ஆபீஸை புரட்டிப் போட்ட கோட்.. முதல் நாளில் ரூ. 126 கோடி வசூல்.. அறிவித்தார் அர்ச்சனா கல்பாத்தி

Meenakshi
Sep 06, 2024,05:41 PM IST

சென்னை: 2024ம் ஆண்டின் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமாக உருவெடுத்துள்ளது விஜய் நடித்த கோட். முதல் நாளிலேயே இப்படம் உலகளவில் ரூ. 126.32  கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதேசமயம், விஜய்யின் முந்தைய லியோ பட முதல் நாள் வசூல் சாதனையை முறியடிக்க தவறி விட்டது கோட்.


தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகியுள்ள கோட் படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் கூட மிகப் பெரிய ஓப்பனிங்கைக் கொடுத்துள்ளது. முதல் நாளில் 99 சதவீத இருக்கைகள் நிரம்பிய நிலையில் மிகப் பெரிய பிளாக்பஸ்டராக மாறியுள்ளது. முதல் நாளிலேயே இப்படம் உலக அளவில் ரூ. 126.32 கோடியை அள்ளியுள்ளது.  லியோ படத்தின் முதல் நாள் வசூல் ரூ. 148 கோடியாகும். அந்த வகையில் கோட், லியோவுக்கு அடுத்த இடத்தையே பிடித்துள்ளது.




மிகப் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான படம் கோட். வித்தியாசமான கதைக்களத்துடன் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ள கோட், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகியுள்ளது. அதிக அளவிலான திரைகளிலும் கோட் படம் திரையிடப்பட்டது. கோட் படத்திற்கு, சென்னையில் 1003 ஷோக்கள் முதல் நாளில் இடம் பெற்றிருந்தது. பெங்களூரில் 1140 ஷோக்கள் காட்டப்பட்டுள்ளன. இது சென்னையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த ஆண்டின் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமாக கோட் உருவெடுத்துள்ளது. தற்போது உள்ள அதே அளவிலான கூட்டம் தொடர்ந்து நீடித்தால் இன்னும் சில நாட்களில் இப்படத்தின் வசூல் ரூ. 500 கோடியைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லியோ படம் உலக அளவில் ரூ. 618 கோடியை வசூல் செய்தது. அந்த சாதனையை கோட் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


கோட் படம் முதல் நாளில் ரூ. 126 கோடியை வசூல் செய்ததை தற்போது ரசிகர்கள் தடபுடலாக சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்