சின்ன சின்ன கண்கள்.. 9 வருடங்களுக்குப் பிறகு மெலடியில் உருக்கிய விஜய்.. GOAT 2வது சிங்கிள்!

Su.tha Arivalagan
Jun 22, 2024,06:19 PM IST

சென்னை: நடிகர் விஜய் கிட்டத்தட்ட 9 வருடங்களுக்குப் பிறகு பாடியுள்ள மெலடி பாடல் என்ற பெருமையுடன் கோட் படத்தில் இடம் பெற்றுள்ள 2வது பாடலான சின்ன சின்ன கண்கள் உருவாகி வெளியாகி ரசிகர்களை உருக்கி எடுத்து வருகிறது.


இது சாதாரண மெலடி இல்லை.. காதலும், அன்பும், பாசமும், அக்கறையும் கலந்த காதல் மெலடி என்பது கூடுதல் விசேஷமாக மாறியுள்ளது. சூப்பர் ஸ்பெஷல் பிறந்தநாள் கிப்ட்டாக இந்தப் பாடலை கோட் டீம்,  குறிப்பாக இயக்குநர் வெங்கட் பிரபு - இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் விஜய்க்கும், அவரது ரசிகர்களுக்கும் வழங்கியுள்ளனர்.




மறைந்த பவதாரணியின் குரலைக் கேட்டதுமே மனசெல்லாம் நெகிழ்கிறது.. எப்படிப்பட்ட குரலை நாம் இழந்துள்ளோம் என்ற வேதனை மற்றும் வலியுடன்தான் பாடலை ரசிக்க முடிகிறது. இந்தப் பாடலில் பவதாரணியின் குரலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் பாட வைத்துள்ளனர். விஜய்யின் குரல் வேற லெவல்.. இப்படி ஒரு ஐஸியான குரலை நாம் கமல்ஹாசனிடம் கூட கண்டதில்லை. ஹீரோக்களிலேயே சூப்பராக பாடக் கூடியவர் கமல்ஹாசன்தான். அவருக்கு கூட இப்படிப்பட்ட மெலடி குரல் இருந்ததில்லை. விஜய் தனது 50 வயதில் பாடியுள்ள இந்தப் பாடல் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ட்ரீட்டாக மாறியுள்ளது.


பாடலை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். விஜய்யும், பவதாரணியின் குரலும் இணைந்து பாடியுள்ளனர். விஜய் தனது மனைவி சினேகா மற்றும் குழந்தையுடன் தோன்றும் காட்சிகள் இந்தப் பாடலில் இடை இடையே வருகிறது. சினேகா கர்ப்பமாகவும் இருப்பது போல தெரிகிறது. அதாவது விஜய்க்கு 2 குழந்தைகள் என்பது போல தெரிகிறது. அந்த இரண்டு பேரும் சேர்ந்து மொத்தம் 3 வேடங்களில் விஜய் படத்தில் நடித்திருக்கலாம் என்றும் ஊகிக்க முடிகிறது.


கோட் படம் தொடர்பாக படக் குழுவிடமிருந்து வெளியாகும் ஒவ்வொரு தகவலிலும் ஏகப்பட்ட மேட்டர்கள் புதைந்துள்ளதால் படம் குறித்த எதிர்பார்ப்பு படு வேகமாக இருக்கிறது. இந்தப் பாடல் இன்ஸ்டன்ட் ஹிட் என்பதில் சந்தேகமில்லை.. நீங்களும் கேட்டுப் பார்த்து சொல்லுங்க.




யுவன் இசையில் 3வது பாடல்


யுவன் ஷங்கர் இசையில் விஜய் பாடிய மூன்றாவது பாடல் இது. முதல் முறையாக 1998ம் ஆண்டு வெளியான வேலை என்ற படத்தில் யுவன் இசையில் விஜய் பாடியிருப்பார். காலத்துக்கேத்த காணா என்ற அந்தப் பாடல்தான் விஜய், யுவன் இசையில் பாடிய முதல் பாடலாகும். 


அதன் பின்னர் இப்போது மீண்டும் யுவன் இசையில் கோட் படத்திற்காக பாடியுள்ளார். இதில் 2 பாடல்களை அவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இசையமைப்பாளர் தேவா, பரணிக்குப் பிறகு யுவன் இசையில்தான் ஒரே படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.