"நாட்டு நலன் கருதி".. பாஜக கூட்டணியில் இணைகிறது தமிழ் மாநில காங்கிரஸ்.. ஜி.கே.வாசன்

Su.tha Arivalagan
Feb 26, 2024,06:47 PM IST

சென்னை: நாட்டு நலன் கருதி, தமிழ் மொழி, தமிழ்நாடு, தமிழ் கலாச்சாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரும் பாஜகவுடன் கூட்டணி சேர தமிழ் மாநில காங்கிரஸ் முடிவு செய்துள்ளது என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.


சென்னையில் இன்று செய்தியாளர்களை தனது கட்சி நிர்வாகிகளுடன் ஜி.கே.வாசன் சந்தித்தார். அப்போது பாஜக கூட்டணியில் இணைவதற்கு முடிவு செய்திருப்பதாக அவர் அறிவித்தார். மேலும் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட விரும்புவதாகவும் கூறிய ஜி.கே.வாசன், அதிகாரப்பூர்வமாக கிடைக்கும் சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்தார்.


இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசும்போது ஜி.கே.வாசன் கூறியதாவது:




தமிழ்நாடு மாநிலத்துக்காக இந்த இயக்கம் மத்தியில் பாடுபடும் என்ற நம்பிக்கையோடு இந்த முடிவை எடுத்திருக்கிறோம். தமிழ் மொழி, தமிழ்நாடு, தமிழர்கள், இந்திய மக்கள், தமிழ் கலாச்சாரம் இதை விரும்பும் மத்திய அரசு, அதற்கு பிரதமரை கோடிட்டுக் காண்பித்து பல உதாரணங்களைக் கூற முடியும். முக்கியமாக இந்தியப் பொருளாதாரம், நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முக்கியம் கொடுத்து அதை கருத்தில் கொண்டு இந்த நல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


தமாகா அனைத்துத்  தரப்பு மக்களின் எண்ணங்களை தொடர்ந்து பிரதிபலிக்கிறது. காமராஜர், மூப்பனார் ஆசியோடு இந்தப் பணியை தொடர்வோம். அவர்களுடய வழிகாட்டுதலின் பேரில் சிறுபான்மை இனத்தவர், எஸ்சி எஸ்டி மக்களின் தேவைகளை வளர்ச்சியை, நன்கு உணர்ந்த கட்சியாக அவர்களுக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்கக் கூடிய நல்ல திட்டங்கள் தொடர புதிய திட்டங்கள் கிடைக்க, செயல்படுத்த மேலும் அவர்களுக்கு கூட்டணியில் நம்பிக்கை கொடுக்கக் கூடிய கட்சியாக தமாகா செயல்படும். 


லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரை 2 முறை பல்வேறு மாநிலங்களில் ஆதரவை பெற்று வென்ற கட்சி பாஜக. தமிழக வாக்காளர்கள் அதனைக் கூர்ந்து கவனித்துக் கொண்டுள்ளார்கள். குறிப்பாக தமிழகத்தில் பட்டி தொட்டியெங்கும் நகரம் முதல் கிராமம் வரை 3வது முறை பாஜக ஆட்சி தொடர்ந்தால் பொருளாதார ரீதியாக நாடு உயரும், ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கக் கூடிய பலன்கள் அதிகரிக்கும் என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. படித்தவர்கள், இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். எனவே இந்த முறை பாஜக வெற்றி என்பது உலக அளவிலே இந்தியாவை 3வது பொருளாதார உயர்ந்த நாடாக மாற்றக் கூடிய உயர்ந்த நிலையை ஏற்படுத்தும். 


பாஜக ஆட்சி தொடருவது, நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும். வளர்ச்சி தொடரும். ஏழ்மை குறையும் அனைத்துத் தரப்பினரும் பயனடைவார்கள். தமிழக மக்கள் இதனை நன்கு உணரத் தொடங்கியுள்ளனர். இதை அறிந்து தெரிந்து புரிந்த பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் அடிப்படையில் வாக்களிக்கக் கூடிய உயர்வான நிலையை தமாகா கூட்டணி என்ற கட்சி முறையில் மக்களை சந்தித்து கூட்டங்கள் போட்டு இதை வலியுறுத்தும். 


தமிழத்தைப்  பொறுத்தவரை கோவிட்டுக்குப் பிறகு என்ன நிலை..  மற்ற மாநிலங்களின் நிலை என்ன, நாடுகளின் நிலை என்ன. கோவிட் தாக்கம் வளர்ந்த நாடுகளை கூட பெரிய அளவில் பாதித்தது. இன்னும் பல வளர்ந்த நாடுகள் தவித்து் கொண்டுள்ளன. யுகே அதற்கு எடுத்துக்காட்டு. பல நாடுகள் இன்னும் தவித்துக் கொண்டுள்ளன. சிலோன், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகியவை அதற்கு உதாரணம். இந்தியாவைப் பொறுத்தவரை மத்திய ஆட்சியாளர்களின் ஆளுமைத் திறன் முறையான செயல்பாட்டின் அடிப்படையில் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா, மற்ற வளர்ந்த நாடுகளையும், அருகாமை நாடுகளையும் ஒப்பிடுகையில், அதிக தங்கு தடையின்றி தாமதமின்றி அனைத்து துறையிலும் படிப்படியாக வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்றார் ஜி.கே.வாசன்.


பாஜக கூட்டணியில் முதலில் அறிவித்த கட்சியாக தமாகா உருவெடுத்துள்ளது. இக்கட்சிக்கு எத்தனை சீட்டை பாஜக ஒதுக்கும் என்று தெரியவில்லை. அனேகமாக தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்படலாாம். கூடுதலாக ஒரு ராஜ்யசபா சீட் தரப்படலாம். பாஜக 3வது முறையாக ஆட்சியமைக்கும்போது மத்திய அமைச்சர் பதவியும் வாசனுக்குக் கிடைக்கக் கூடும் என்று தெரிகிறது.


திமுக கூட்டணிக்கு அடுத்து பாஜகவில்தான் கூட்டணி குறித்த முதல் தெளிவு கிடைத்துள்ளது. அதிமுக  கூட்டணியில் இன்னும் எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.