ராத்திரியில் போய் பிரதமரையும், அமித்ஷாவையும் சந்தித்த பரூக் அப்துல்லா.. குலாம் நபி ஆசாத் பரபர தகவல்!

Su.tha Arivalagan
Feb 19, 2024,02:41 PM IST

டெல்லி: முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லாவும், உமர் அப்துல்லாவும், பிரதமர் நரேந்திர மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் இரவு நேரத்தில் ரகசியமாக சந்தித்துப் பேசியதாகவும், யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக இவ்வாறு செய்தனர் என்று கூறியுள்ளார் முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வரான குலாம் நபி ஆசாத்.


காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி விட்ட குலாம் நபி ஆசாத், ஜனநாயக முற்போக்கு சுதந்திர கட்சி என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இந்தியா டுடே டிவிக்கு அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.


அப்போது அவர் கூறுகையில், இரு அப்துல்லாக்களும் ஸ்ரீநகரில் ஒன்று பேசுகிறார்கள்.. ஜம்முவில் இன்னொரு மாதிரியாக பேசுகிறார்கள்.. டெல்லி வந்து விட்டால் வேறு மாதிரி பேசுகிறார்கள். அவர்களிடம் நம்பகத்தன்மையே இல்லை.




கடந்த 2014ம் ஆண்டே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய இருவரும் முயற்சித்தனர். அப்பாவும், மகனும் டபுள் கேம் ஆடுவதில் வல்லவர்கள்.  ஒரே சமயத்தில் அரசையும், எதிர்க்கட்சியையும் சமரசப்படுத்த இவர்கள் முயல்கின்றனர். தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயகக் கட்சியும், பாஜகவுடன் கூட்டணி வைத்து ஜம்மு காஷ்மீரில் ஆட்சியமைக்க முயலுகின்றன.


கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி பிரதமர் மோடியை இரு அப்துல்லாக்களும், ரகசியாக சந்தித்தனர். அதன் பிறகுதான் 370வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டது.  நான் இவர்கள் போல கிடையாது. உண்மையான மதச்சார்பற்ற தலைவன் நான். இந்து சகோதரர்களை ஏமாற்றுவதற்காக கோவிலுக்குப் போவது போல நான் நடிப்பதில்லை. தீவிரவாத போக்கில் ஈடுபடும் இஸ்லாமியர்களுக்கும் நான் இடம் கொடுப்பதில்லை என்றார் குலாம் நபி ஆசாத்.