விமானங்களில் பயணிக்கும்போது.. குழந்தைகளை மடியில் வைத்திருப்பது அபாயகரமானது.. தவிருங்கள்!

Su.tha Arivalagan
Jan 12, 2024,07:33 PM IST

வாஷிங்டன்:  விமானங்களில் பயணிக்கும் போது, குழந்தைகளை அதற்குரிய சீட்டுகளில் அமர வைத்து பயணிக்க வேண்டும். மாறாக மடியில் வைத்துக் கொண்டு பயணிப்பது அபயாகரமானது என்று அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவன சம்பவத்தை மேற்கோள் காட்டி அமெரிக்க விமான பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


சமீபத்தில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் பல ஆயிரம் அடி உயரத்தில் இருந்தபோது திடீரென ஒரு கதவு பெயர்த்துக்  கொண்டு போனது, அருகில் இருந்த காலி சீட்டும் கழன்று விழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


171 பயணிகள் மற்றும் ஆறு ஊழியர்களுடன் டேக் ஆப் ஆன அந்த விமானம் 16,000 அடி உயரத்தில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தின்போது, 2 செல்போன்கள், ஒரு சீட், ஒரு பெண்ணின் சட்டை ஆகியவை வெளியில் போய் விழுந்தது. 




சம்பவத்தின்போது 3 பயணிகள் மட்டும் சீட் பெல்ட் போடாமல் இருந்தனர். மற்றவர்கள் சீட் பெல்ட் போட்டிருந்தனர். இதுதவிர விமானத்தில் 3 கைக்குழந்தைகளும் பயணித்தனர்.  அவர்களை அவர்களது பெற்றோர்கள் மடியில் கிடத்தி பயணித்துள்ளனர்.


தற்போது அலாஸ்கா விமான சம்பவத்தை மேற்கோள் காட்டி இப்படி மடியில் கிடத்தில் கொண்டு செல்வது அபாயகரமானது என்று அமெரிக்க விமானப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இனிமேல் இதுபோல பயணிப்பதை தவிர்க்க வேண்டும். இது குழந்தைகளின் பாதுகாப்புக்கு உகந்ததல்ல என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


அமெரிக்காவைப் பொறுத்தவரை தற்போது உள்ள விதிமுறைப்படி, 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் டிக்கெட் வாங்காமல் இலவசமாகவே பயணிக்கலாம். ஆனால் குழந்தைகளை பெற்றோர்கள் அல்லது அவர்களை அழைத்து வருவோர் மடியில் அமர்த்திக் கொண்டு பயணிக்க வேண்டும். மற்ற குழந்தைகளுக்கு தனியாக சீட் தரப்படும். அதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படும்.


குழந்தைகளை மடியில் கிடத்தி வரும்போது, அலாஸ்கா விமானத்தில் நடந்தது போன்ற சம்பவம் நடந்தால் குழந்தைகள், பலத்த காற்று அழுத்தத்தால் வெளியில் இழுத்துக் கொண்டு போகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதுபோன்று அழைத்து வருவதைத் தவிர்க்குமாறு விமான நிறுவனங்களை அமெரிக்க விமான பயணிகள் பாதுகாப்புப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.