ஈரோடு கிழக்கில் பாஜக போட்டியிட வேண்டும்.. அண்ணாமலை செல்வாக்கை நிரூபிக்க வேண்டும்.. காயத்ரி ரகுராம்

Su.tha Arivalagan
Jan 23, 2023,03:09 PM IST


சென்னை:  ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் தேசியக் கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது. எனவே அதை எதிர்த்து தேசியக் கட்சியான பாஜக போட்டியிட வேண்டும். அண்ணாமலை தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் நடிகை காயத்ரி ரகுராம்.


பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தவர் காயத்ரி ரகுராம். திருச்சி சூர்யா - டெய்சி சரண் இடையிலான ஆபாசப் பேச்சு ஆடியோ வெளியான விவகாரத்தில் அவர் டெய்சிக்கு ஆதரவாகவும், கட்சித் தலைமைக்கு எதிராகவும் பரபரப்பு கருத்துக்களைத் தெரிவித்தார். இதையடுத்து அவரை கட்சி சஸ்பெண்ட் செய்தது. ஆனால் தான் கட்சியை விட்டு விலகுவதாக அவர் அறிவித்தார்.


இந்த நிலையில் சமீபத்தில் பாஜகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் காயத்ரி ரகுராம். அன்று முதல் தொடர்ந்து அண்ணாமலை தொடர்பாக தொடர்ந்து டிவீட் போட்டபடி உள்ளார். தற்போது ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தொடர்பாக  அண்ணாமலைக்கு தினசரி பல்வேறு கேள்விகளைக் கேட்டு வருகிறார்.


அவர் போட்டுள்ள லேட்டஸ்ட் டிவீட்டில், இந்த ஈரோடு இடைத்தேர்தலில் தேசியக் கட்சி காங்கிரஸ் போட்டியிடுவதால் எதிராக தேசியக் கட்சி பாஜக போட்டியிட வேண்டும். அண்ணாமலை தலைமையில் பாஜகவின் வளர்ச்சியை நிரூபிக்க வேண்டும். அண்ணாமலை உறுதியளித்த 29 தொகுதி 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக இந்த ஈரோடு இடைத்தேர்தலில் கூட்டணி இல்லாமல் அண்ணாமலை போட்டியிட்டு உண்மையான பலத்தை காட்ட வேண்டும். அல்லது 2024ல் நடக்கும் கூட்டணியுடன் போட்டியிட்டு அண்ணாமலையின் உண்மையான பலத்தை காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார் காயத்ரி ரகுராம்.


ஏற்கனவே அவர் ஜனவரி 15ம் தேதி போட்ட டிவீட்டில், ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன், நான் உங்களை எதிர்த்து நிற்பேன் சவால் விடுகிறேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா? என்று கேட்டிருந்தார் காயத்ரி ரகுராம் என்பது நினைவிருக்கலாம். காயத்ரியின் சரமாரி கேள்விகளுக்கு பாஜக தரப்பில் யாரும் பதில் அளிப்பதில்லை, தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.