ஈரோடு கிழக்கில் நில்லுங்க.. மோதிப் பார்ப்போம்.. அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் சவால்!

Su.tha Arivalagan
Jan 16, 2023,09:52 AM IST
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிட வேண்டும். அவரை எதிர்த்து நான் நிற்பேன் என்று சவால் விட்டுள்ளார் பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம்.



நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். அவருக்கும், மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் பல்வேறு விவகாரங்களில் ஒத்துப் போகவில்லை. நீரு பூத்தா நெருப்பாக இந்த சலசலப்பு நீடித்து வந்த நிலையில், டெய்சி தங்கையா - திருச்சி சூர்யா ஆபாச ஆடியோ விவகாரத்தில் பெரிதாக வெடித்தது.

டெய்சிக்கு  ஆதரவாக காயத்ரி பகிரங்கமாக பேச, அவரை கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்தார் அண்ணாமலை. அதன் பிறகு பகிரங்கமாகவே அண்ணாமலைக்கு எதிராக களம் இறங்கினார் காயத்ரி. இதைத் தொடர்ந்து அவர் பாஜகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் நடை பயணம் போகப் போவதாக காயத்ரி அறிவித்துள்ளார். அத்தோடு தற்போது அண்ணாமலைக்கு அவர் சவால் விட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவீட்டில்,  ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன், நான் உங்களை எதிர்த்து நிற்பேன் சவால் விடுகிறேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா?

நான் தோற்றால் 5 நிமிடத்தில் நீங்கள் முதல்வராகி ஆட்சியை மாற்றலாம்.  நான் தமிழ்நாட்டின் மகள், நீங்கள் தமிழகத்தின் மகன். தமிழகமா அல்லது தமிழ்நாடு ஆ என்று பார்ப்போம் என்று அதில் கூறியுள்ளார் காயத்ரி ரகுராம்.