இஸ்ரேலில் அதானி.. ஊரே அல்லோகல்லப்பட்டாலும்.. புன்சிரிப்புடன் புது டீல்!

Su.tha Arivalagan
Feb 01, 2023,10:18 AM IST
ஹபியா:  அதானி குழுமத்தை பெரும் புயல்கள் சூழ்ந்து நின்றாலும், அவரது நிறுவனங்களின் பங்குகள் பெருமளவில் சரிந்தாலும், உலகப் பணக்காரர்கள் வரிசையில் வீழ்ச்சி அடைந்தாலும்.. தனது பயணம் நிற்பதில்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக நேற்று ஒரு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் கெளதம் அதானி.



இஸ்ரேலின் ஹபியா துறைமுகத்தை 1.2 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியுள்ளார் கெளதம் அதானி. இதுதொடர்பான ஒப்பந்தம் நேற்று இஸ்ரேலில் கையெழுத்தானது. இதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நதன்யாகு, கெளதம் அதானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

ஹபியா துறைமுக டீல் மட்டுமல்லாமல், டெல்அவிவ் நகரில் செயற்கை நுன்னறிவு ஆய்வகம் ஒன்றைத் தொடங்கப் போவதாகவும் அதானி அறிவித்துள்ளார். 

அமரிக்காவின் ஹின்டன்பர்க் ரிசர்ச் அமைப்பு அதானி குழுமம் மீது சரமாரியான மோசடிப் புகார்களைக் கூறியுள்ளது. இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் சரிவைக் கண்டுள்ளன. அதானியும் உலகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில்  7வது இடத்துக்குப் போய் விட்டார். ஆனாலும் அதானி நிலை குலைந்த மாதிரி தெரியவில்லை. இஸ்ரேலில் புது டீலை மேற்கொண்டு அனைவரையும் அதிர வைத்துள்ளார்.

நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இஸ்ரேல் பிரதமர் நதன்யாகு கூறுகையில், இது மிக முக்கியமான ஒப்பந்தம். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை இது மேலும் மேம்படுத்தும் என்றார்.  இஸ்ரேலின் இரண்டாவது பெரிய துறைமுகம் ஹபியா. வர்த்தக துறைமுகம் இது என்பது குறிப்பிடத்தக்கது.