Nellai.. அதிகாலையில் பயங்கரம்.. ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளரை.. வெட்டிக் கொன்ற மர்மகும்பல்!

Manjula Devi
Mar 18, 2025,04:56 PM IST

திருநெல்வேலி:  நெல்லையில் ஓய்வு பெற்ற  காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிஜில் என்பவரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருநெல்வேலி மாவட்டம், டவுன் காட்சி மண்டபம் அருகே உள்ள பள்ளிவாசலுக்கு, ரம்ஜான் நோன்பு திறப்பதற்காக இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஓய்வு பெற்ற உதவிக் காவல் ஆய்வாளர் ஜாஹிர் உசேன் பிஜில்   சென்றிருந்தார். தொழுகை முடிந்து வீடு திரும்பும் வழியில்  அடையாளம் தெரியாத ஐந்து பேர் கொண்ட மர்ம நபர்கள்  அவரை வழிமறித்து தாக்கினர். அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற ஜாகிர் உசேனை மடக்கி பிடித்து மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை அனுமதித்தனர்.




இதனைத் தொடர்ந்து நெல்லை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர போலீசார் மேற்கொண்டனர். மறைந்த கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி இருந்தது தெரியவந்துள்ளது.  இவருக்கும் அதே பகுதியில் வசித்து வந்த சிலருக்கும் வக்புக்கு சொந்தமான 32 சென்ட் இடம் தொடர்பான முன்விரோத பிரச்சனை உள்ளதாகவும், இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.


இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, முன் விரோத பிரச்சனையால் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேனை மர்ம கும்பல் திட்டமிட்டு  படுகொலை செய்திருக்கிறாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை வேளையில் முன்னாள் காவல் ஆய்வாளர்களை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டத்தை அதிகரித்துள்ளது. இதனால் இந்த பதட்டத்தை கட்டுப்படுத்த மாநகர காவல்துறை ஆணையர் கீதா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டுள்ளனர்.