ககன்யான் மாதிரி விண்கல சோதனை.. சூப்பர் வெற்றி.. திட்டமிட்டபடி விண்கலம் கடலில் இறங்கி அசத்தல்!

Su.tha Arivalagan
Oct 21, 2023,10:29 AM IST

ஸ்ரீஹரிகோட்டா: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் பரிசோதனை இன்று வெற்றிகரமாக அமைந்தது.


மாதிரி விண்கலத்துடன் ராக்கெட் ஏவப்பட்டது. விண்ணில் 17 கிலோமீட்டர் தொலைவுக்கு பயணித்த விண்கலம் பின்னர் பாராசூட் உதவியுடன் வங்கக் கடலில் இறங்கியது. முழு பரிசோதனையும் முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.


முன்னதாக இந்த  ராக்கெட் செலுத்தும் சோதனை காலை 8 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களுக்காக திட்டம் கடைசி 5 விநாடிகளில்  நிறுத்தப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் 10 மணிக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.




ஒற்றை பூஸ்டர் என்ஜினுடன் ஏவப்பட்ட , TV-D1 ராக்கெட்டிலிருந்து திட்டமிட்டபடி மாதிரி விண்கலம் அழகாக பிரிந்தது. 17 கிலோமீட்டர் தொலைவுக்கு விண்ணில் பயணித்த பின்னர் மீண்டும் தரையிறங்கியது. அப்போது 3 பாராசூட்கள் மூலம் விண்கலம் மெல்ல மெல்ல கீழிறங்கி வங்கக் கடலில் திட்டமிட்டபடி இறங்கியது.


கடலில் இறக்கப்பட்ட விண்கல மாதிரியை பின்னர் இந்திய கடற்படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். இதன் மூலம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி, பின்னர் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கும் சோதனை முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.


கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி சந்திராயன்  விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. அதன் பின்னர் ஆதித்யா எல் 1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியா தனது ககன்யான் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.


ககன்யான் திட்டம் என்பது இந்திய விண்கலத்தின் மூலம் பூமியின் சுற்றுப் பாதைக்கு மனிதர்களை அனுப்பி அங்கு நிறுவப்படும் விண்வெளி மையத்திலிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வைப்பது மற்றும் அவர்களை பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவது இதன் நோக்கமாகும். 


மூன்று பேர் செல்லும் வகையிலான விண்கலத்தை இந்தியா வடிவமைத்துள்ளது. இந்தியா இதுவரை விண்வெளிக்கு செயற்கைக்கோளையும், விண்கலத்தையும் அனுப்பி உள்ளது. ஆனால் மனிதரை இதுவரை அனுப்பவில்லை. ககன்யான் திட்டத்தின் மூலம் இந்தியர்கள் விண்வெளிக்கு செல்லும் கனவு நனவாகும்.


ராகேஷ் சர்மா என்ற இந்தியர்தான் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் ஆவார். ஆனால் அவர் ரஷ்ய விண்கலத்தின் உதவியுடன் விண்ணுக்குச்  சென்றவர் ஆவார். இவர் தவிர இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரு பெண்கள் விண்வெளிக்குச் சென்றுள்ளனர். அவர்கள் இருவரும் அமெரிக்க இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.