ஜி20 மாநாடு.. டெல்லியில் மு.க.ஸ்டாலின்.. குடியரசுத் தலைவர் டின்னரில் பங்கேற்கிறார்!

Su.tha Arivalagan
Sep 09, 2023,03:54 PM IST
டெல்லி: ஜி 20 மாநாடு டெல்லியில் தொடங்கியுள்ளநிலையில் இன்று இரவு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் சிறப்பு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார்.

ஜி 20 உச்சி மாநாடு இன்றும் நாளையும் டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 29 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாட்டின் தலைவர்களும் டெல்லியில் குவிந்துள்ளதால் டெல்லியில் வரலாறு காணாத பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாநாட்டில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்களை இந்திய பாரம்பரிய முறைப்படி உற்சாகமாக வரவேற்றார். ஜி 20 மாநாட்டில் பங்கேற்றுள்ள பல்வேறு நாட்டுத் தலைவர்களுக்கும் ,
மாநில முதல்வர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும்  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சார்பில்
இன்று இரவு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று இரவு விருந்தில் பங்கேற்கும் அவர், அதை முடித்துக் கொண்டு நாளை பிற்பகல் சென்னை திரும்புவார்.