ராகுல் காந்தியின்.. "பாரத் நியாய யாத்திரை".. மணிப்பூர் டூ மும்பை வரை.. ஜனவரி 14 முதல் தொடங்குகிறார்!

Manjula Devi
Dec 27, 2023,06:12 PM IST

டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது இரண்டாம் கட்ட பாத யாத்திரையை ஜனவரி 14ஆம் தேதி தொடங்கி மார்ச் 20இல் நிறைவு செய்கிறார். இந்த யாத்திரைக்கு "பாரத் நியாய யாத்திரை" என பெயரிடப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரையை நடத்தினார் ராகுல் காந்தி. இது நாடு முழுவதும் மிகப் பெரிய பேசு பொருளாக மாறியது. இந்த யாத்திரையானது 2023ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி முடிவடைந்தது. காங்கிரஸ் கட்சிக்கு பல மாநிலங்களில் செல்வாக்கை வலுப்படுத்த உதவியது.


பாரத் நியாய யாத்திரை




இந்நிலையில்  ராகுல் காந்தி 2வது கட்டமாக இன்னொரு யாத்திரையை அடுத்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி தொடங்கவுள்ளார். இதற்கு பாரத் நியாய யாத்திரை என்று பெயரிடப்பட்டுள்ளது. இது மணிப்பூரில் தொடங்கி மும்பையில் முடியும்.  இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே. சி வேணுகோபால் கூறியதாவது:


இரண்டாம் கட்ட  யாத்திரை மணிபூரிலிருந்து தொடங்கி நாகலாந்து, அசாம், மேகாலயா, மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் வழியாக மகாராஷ்டிராவின் மும்பை வரை மேற்கொள்ளப்படும். 


14 மாநிலங்கள் 85 மாவட்டங்கள் 66 நாட்கள்


மொத்தம் 14 மாநிலங்களில், 85 மாவட்டங்கள் வழியாக மக்களை சந்திக்கிறார் ராகுல் காந்தி. இந்தப் பயணம் மொத்தம் 66 நாட்கள் வரை நடைபெறும். இதன் பயண தூரம்  6500 கிலோமீட்டர் ஆகும் என்றார் வேணுகோபால்.


இனக் கலவரம் வெடித்து பல உயிர்களைக் குடித்த, பல பெண்களை மானபங்கப்படுத்தி நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பிய மணிப்பூரிலிருந்து ராகுல் காந்தியின் 2வது யாத்திரை தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.