10ஆம் தேதி முதல்.. பொங்கல் தொகுப்புடன்.. ரூ. 1000 ரொக்கமும் வழங்கப்படும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

Manjula Devi
Jan 06, 2024,06:34 PM IST

சென்னை: பொங்கல் திருநாளை முன்னிட்டு வரும் 10ஆம் தேதி முதல் பொங்கல் தொகுப்புடன் ரூபாய் 1000 ரொக்கப்பணமும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


இந்த பொங்கல் பரிசு வரும் 10 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையிலும் பெற்றுக் கொள்ளலாம். 13ஆம் தேதிக்குள் பெற முடியாதவர்கள் 14ஆம் தேதி பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தை திருநாளாம் பொங்கல் பண்டிகை உழவுத் தொழிலுக்கு நன்றி செலுத்தும் வகையில் உலகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட உள்ளது. அனைத்து மக்களும் தாங்கள் செய்யும் தொழிலுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அந்நாளில் அரசு சார்பில் வருடா வருடம் பச்சரிசி, முழு கரும்பு, சர்க்கரை கொண்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். 




2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 2500 பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. ஆனால் கடந்த திமுக ஆட்சியில் ரொக்கப் பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக பொங்கல் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. இந்த வருடம் புயல், மழை வெள்ளம் காரணமாக வெள்ள நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. அதாவது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வெள்ள நிவாரணம் அளிக்கப்பட்டது.


இதனால் பொங்கல் தொகுப்புடன் இலவச வேஷ்டி சேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு கட்சி தலைவர்கள் மக்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர். 

இதனை ஏற்ற தமிழக அரசு கடந்த 2 ஆம் தேதி அரசு  ஊழியர்கள், பொதுத் துறையில் பணிபுரிவோர், வருமான வரி செலுத்துவோர்,  சர்க்கரை அட்டைதாரர்கள் ஆகியோர் நீங்கலாக ஏனைய குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூபாய்1000 மற்றும் இலவச வேஷ்டி சேலை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. 


இவற்றை வழங்குவதற்காக அனைத்து நியாய விலை கடைகளிலும் தக்க ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு,வரும் 10ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்புடன், ரூபாய் 1000 ரொக்கத் பணம் வழங்க போவதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. மேலும்

வருகின்ற 10 தேதி முதல் 13ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ள நிலையில், நாளை முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் .13ஆம் தேதிக்குள் பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ள முடியாதவர்கள் 14ஆம் தேதி பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு நியாய விலை கடையிலும் தினமும் எவ்வளவு பேர் பொங்கல் தொகுப்புடன், பரிசுத்தொகை பெற்றுக் கொண்டனர்.. இன்னும் எவ்வளவு பேர் பெறவில்லை.. ஒரு நாளைக்கு மொத்தம் எவ்வளவு பேர் பயன் அடைந்து இருக்கிறார்கள்.. என்பதை கவனித்துக் கொள்ள ஒரு அதிகாரியை நியமனம் செய்து அதன் பணியை கண்காணிக்க வேண்டும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.