"நண்பேன்டா".. இது வேற லெவல் சீர்வரிசையா இருக்கே மாப்ள!

Meenakshi
Sep 05, 2023,04:15 PM IST
மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே  காது குத்து விழாவில் ஜல்லிக்கட்டுக் காளையை சீராக கொடுத்து அசரடித்து விட்டனர் நண்பர்கள்.

கிராமத்துக் கல்யாணங்களைப் போல கலகலலப்பான சந்தோஷமான விஷயங்களைப் பார்க்கவே முடியாது. விதம் விதமான சீர்வரிசைகளுடன் அசரடித்து விடுவார்கள். யாருமே கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு சீர் கொடுத்து அசத்துவதுதான் இப்போதைய டிரெண்ட்டிங்காக உள்ளது.

அந்த வரிசையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள ஆண்டிபட்டியில் நடந்த காது குத்தும் விழாவின்போது வித்தியாசமான சீர் வரிசை கொடுத்து அசத்தியுள்ளனர். அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன்-லதா தம்பதியினர். இவர்களது மகன், மகளுக்கு காதுகுத்து விழா நடைபெற்றது. 



வழக்கமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தாய்மாமான் சீர்தான் மற்றவர்களை விட தூக்கலாக இருக்கும். ஆனால் அதையும் தாண்டி அட்டகாசம் செய்து விட்டனர் பாலகிருஷ்ணனின் நண்பர்கள். சுமார் 500 கிலோ எடை கொண்ட ராட்சத மாலையை கிரேன் மூலம் ஊர்வலமாக எடுத்துவந்தனர். அதனை தொடர்ந்து பொய்க்கால் குதிரையாட்டம், ஆட்டம்பாட்டம், மேளதாளத்துடன் சீர்வரிசையை எடுத்து வந்தனர். 

பின்னர், பாலகிருஷ்ணன் தம்பதிக்கு  பணத்தால் ராட்சத மாலையையும் அணிவித்தனர். கூடவே ஜல்லிக்கட்டுக் காளையையும் சீராக கொடுத்து மிரட்டி விட்டனர். இதனால் பாலகிருஷ்ணன்-லதா தம்பதியினர் மட்டும் இன்றி ஊர்மக்களும் கூட பார்ரா என்று ஆச்சரியப்பட்டுப் போய் விட்டனர்.

உறவினர்களே கூட இந்த அளவுக்கு யாரும் இந்தக் காலத்தில் செய்ய மாட்டார்கள். ஆனால் நண்பனின் குடும்பத்துக்காக, நாங்களும் தாய்மாமன்கள்தான் என்று உரிமையுடன் செய்த இந்த நண்பர்களைப் பார்த்து ஊரே வியந்து போயுள்ளதாம்.

சும்மாவா சொன்னாங்க.. "நண்பேன்டா"ன்னு!