மணிப்பூரில் மீண்டும் வன்முறை, துப்பாக்கிச்சூடு... 2 பேர் பலி

Aadmika
Aug 30, 2023,11:54 AM IST
இம்பால் : மணிப்பூரின் பிஷ்னுபூர் மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. அங்கு நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர். 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கொயிரடக் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஜங்மின்லுன் கங்தே என்ற 30 வயது தன்னார்வலர் உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டுள்ளனர். 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதே போல் நரன்செயினா என்ற கிராமத்தில் வயலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சலர் ஜோடின் என்பவர் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். 

நெஞ்சில் குண்டு காயங்களுடன் இருந்த அவர் தற்போது இம்பாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 

மாவட்ட போலீசார், அசாம் ஊர்காவல் படை, ராணுவம், மத்திய பாதுகாப்பு படையினர் தலையிட்ட பிறகு அங்கு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த துப்பாக்கிச் சூடு எதற்காக நடத்தப்பட்டது என தெரியவில்லை. ஜாதி பிரச்சனை காரணமாக இரு வேறு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. 

மணிப்பூரில் இந்த ஆண்டு மே மாதம் முதல் நடைபெற்று வரும் கலவரத்தில் இதுவரை 140 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.