இந்தியா - தெ. ஆப்பிரிக்கா மகளிர் டெஸ்ட் போட்டி.. முற்றிலும் இலவசம்.. ரசிகர்களுக்கு சூப்பர் ஆஃபர்!

Su.tha Arivalagan
Jun 26, 2024,06:01 PM IST

சென்னை: இந்தியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி 28ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியை ரசிகர்கள் இலவசமாக கண்டு களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


இந்தியா மகளிர் மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் 28ம் தேதி தொடங்குகிறது. ஜூலை 1ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டி தினசரி காலை 9.30 மணிக்குத் தொடங்கும்.




இப்போட்டியை ரசிகர்கள் இலவசமாக கண்டு களிக்கலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, சி, டி, இ மற்றும் ஐ, ஜே, கே ஆகிய ஸ்டாண்டுகளில் ரசிகர்கள் இலவசமாக அமர்ந்து போட்டியைப் பார்த்து ரசிக்கலாம். விக்டோரியா ஹாஸ்டல் நுழைவாயில் வழியாக சி டி இ ஸ்டாண்டுகளுக்குச் செல்லலாம். இந்த ஸ்டாண்டுகள் நிரம்பியவுடன் வாலாஜா சாலை வழியாக ஐ ஜே கே ஸ்டாண்டுகளுக்குச் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரும் சென்னையிலேயே நடைபெறவுள்ளது. ஜூலை 5ம் தேதி முதல் போட்டியும், 7ம் தேதி 2வது போட்டியும், 9ம் தேதி மூன்றாவது போட்டியும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகளுக்கு ரூ. 150 கட்டணமாக வசூலிக்கப்படும். இவற்றை பேடிஎம் இன்சைடர் ஆப் மூலமாக பெறலாம் என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.