இந்தா பிடி ரூ. 1782 கோடி.. ஒயினை அழிக்க கரன்சியை இறைக்கும் பிரான்ஸ்!

Su.tha Arivalagan
Aug 27, 2023,09:41 AM IST
பாரீஸ்: தேவைக்கும் அதிகமாக தயாரிக்கப்பட்ட ஒயினை அழிக்க பிரான்ஸ் அரசு 200 மில்லியன் யூரோ பணத்தை ஒதுக்கியுள்ளது. இந்தப் பணமானது இந்திய மதிப்பில் ரூ. 1782 கோடியாகும்.

தேவைக்கும் அதிகமாக ஒயின்  தயாரித்து விட்டதால் ஒயின் தயாரிப்பாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளார்கள். அவர்களது சிரமத்தைப் போக்கும் வகையில் அரசே நிதியுதவி செய்து தேவையில்லாத ஒயினை அழிக்கும் நடவடிக்கைக்கு கை கொடுத்துள்ளதாம்.




பிரான்ஸ் நாட்டில் ஒயின் தயாரிப்புத் துறை ஏற்கனவே பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் கூடுதலாக ஒயின் தயாரித்து புதிய சிக்கலில் அது மாட்டிக்கொண்டு விட்டது.   மேலும் ஒயினுக்கான கிராக்கியும் குறைந்து விட்டதால் கூடுதலாக தயாரித்த ஒயின் வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதை உணர்ந்துதான் அவர்களுக்கு அரசு தற்போது கை கொடுத்துள்ளதாம்.

கொரோனாவுக்குப் பிறகு உலகின் பல நாடுகளைப் போலவே பிரான்சிலும் பல்வேறு சமூக பொருளாதார மாற்றங்கள் வந்து விட்டன. வாழிட செலவுகள் அதிகரித்து விட்டன. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து விட்டது. பொருளாதார சூழல் நலிவடைந்துள்ளது. இதனால் வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்து விட்டது. நுகர்வு குறைந்து விட்டதால் தயாரிப்புத் துறையும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக முன்னணி ஒயின் தயாரிப்பு நிறுவனங்களான போர்டியா்ஸ் மற்றும் லாங்குடாக் ஆகியவை ஒயினுக்கான கிராக்கி குறைந்திருப்பதால் நஷ்டத்தை சந்திக்க ஆரம்பித்துள்ளனவாம். இதுகுறித்து லாங்குடாக் ஒயின் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஜீன் பிலிப் கிரானியர் கூறுகையில், அதிக அளவில் ஒயின் தயாரிக்கப்பட்டு விட்டது. ஆனால் வாங்குவோர் குறைந்து விட்டதால் எங்களுக்கு இழப்பு அதிகரித்துள்ளது என்றார்.

தற்போது அரசு வழங்கியுள்ள நிதியின் மூலம், கூடுதல் ஒயின்களை அரசே வாங்கி அவற்றை கழிப்பறை சுத்தப்படுத்தும் பொருட்கள் தயாரிப்பு, கை சானிட்டைசர்கள், பெர்ப்யூம்கள் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.