திருமணமான பெண்களுக்கு வேலை இல்லையா.. அப்டில்லாம் இல்லைங்க.. அடியோடு மறுத்த பாக்ஸ்கான்

Meenakshi
Jun 27, 2024,05:42 PM IST

சென்னை: திருமணம் ஆன பெண்களை  வேலைக்கு  எடுக்க மறுத்ததாக பாக்ஸ்கான் நிறுவனத்தின் மீது சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக பாக்ஸ்கான் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.


சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் பாக்ஸ்கான் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு ஆப்பிள் நிறுவனத்திற்குச் சொந்தமான ஐபோன்கள் அசெம்பிளிங் செய்யப்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கில் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிறுவனத்தில் பாலின பாகுபாடு காட்டப்படுவதாகவும், திருமணமான பெண்கள் வேலைக்கு எடுக்கப்படுவதில்லை என்றும் புகார்கள் சமீப காலமாக எழுந்து வருகின்றன. இந்த புகார் தற்போது விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இது குறித்து அறிக்கை அளிக்கும்படி, தமிழக தொழிலாளர் நலத்துறைக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.




இந்த நிலையில், இந்த விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக பாக்ஸ்கான் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:


எங்கள் நிறுவனத்தில் இது போன்ற பாலிசி எதுவும் இல்லை. சமீபத்தில் வேலைக்கு எடுக்கப்பட்டவர்களில் 25 சதவீதம் பேர் திருமணம் ஆனவர்கள். பாதுகாப்பு கருதி, பாலினம் மற்றும் மதம்  பார்க்காமல் அனைத்து பணியாளர்களும் தங்கம் உள்ளிட்ட உலோக பொருட்களையும் அணிவதை தவிர்க்க வேண்டும் என்ற விதி பின்பற்றப்படுகிறது. திருமணம் ஆன பேண்களை வேலைக்கு எடுப்பது இல்லை என்ற நிபந்தனை எங்களின் கொள்கையே கிடையாது. வேலைக்கு தேர்வு ஆகாத சிலர் இது போன்ற குற்றச்சாட்டை கிளப்பி விட்டுள்ளனர். இந்த குற்றச்சாட்டு நிறுவனத்தை பாதிக்கும்.


இது அனைவருக்கும் பொதுவான விதி. ஆணாக இருந்தாலும் சரி. பெண்ணாக இருந்தாலும் சரி. அவர்கள் திருமணம் ஆனவர்களாக இருந்தாலும், திருமணமாகாதவர்களாக இருந்தாலும் சரி. அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி. தொழிற்சாலையில் பணிபுரியும் போது அனைத்து விதமான உலோகங்களையும் அகற்ற வேண்டும். பாதுகாப்பு காரணங்களுக்காகவே எந்த வொரு உலோகத்தையும் அணிந்து வேலை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. பல்வேறு தொழிற்சாலைகளிலும் இதுபோன்ற கட்டப்பாடுகள் இருக்கின்றன என்று தெரிவித்துள்ளது.