Loksabha elections: 9 மாநிலங்களில்.. 96 தொகுதிகளுக்கு.. நாளை.. 4வது கட்ட மக்களவைத் தேர்தல்!

Su.tha Arivalagan
May 12, 2024,09:59 PM IST

டெல்லி: ஆந்திர மாநில சட்டசபைக்கும், நாடு முழுவதும் 9 மாநிலங்களில் 96 மக்களவைத் தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


7  கட்டமாக நடத்தப்பட்டு வரும் லோக்சபா தேர்தலில் நாளை 4வது கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்து விட்டது.




ஆந்திர மாநிலத்தில் 25 தொகுதிகள், தெலங்கானாவில் 17, உத்தரப் பிரதேசம் 13, மகாராஷ்டிரா 11, மேற்கு வங்காளம் 8, மத்தியப் பிரதேசம் 8, பீகார் 5, ஜார்க்கண்ட், ஒடிஷாவில், ஜம்மு காஷ்மீரில் தலா ஒரு தொகுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதுதவிர ஆந்திர மாநில சட்டசபைக்கும் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது.


சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரினமூல் காங்கிரஸ் கட்சியின் மஹுவா மொய்த்ரா, முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான், ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா,  முன்னாள் நடிகர் சத்ருகன் சின்ஹா, அசாதுதீன் ஓவைசி உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகளில் நாளைதான் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.