நாடாளுமன்றத்தில் அத்துமீறல்.. ஈடுபட்டது மொத்தம் 4 பேர்.. அதில் ஒருவர் பெண்.. யார் இவர்கள்?

Su.tha Arivalagan
Dec 13, 2023,06:12 PM IST

டெல்லி: நாடாளுமன்றத்திற்குள் இருவரும், வெளியே இருவரும் என்று நான்கு பேர் இன்று அத்துமீறியுள்ளனர். இந்த நான்கு பேரில் ஒருவர் பெண். இவர்களைப் போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். இந்த நான்கு பேரும் யார், எதற்காக இந்த செயலில் ஈடுபட்டனர் என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


நாடாளுமன்ற லோக்சபாவுக்குள் கலர் புகையைத் தூவி நடத்திய இந்த "தாக்குதல்" பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


லோக்சசபாவிற்குள் மொத்தம் 2 பேர் அத்துமீறலில் ஈடுபட்டனர். இருவரும் ஜீன்ஸ், டீசர்ட் அணிந்திருந்த இளைஞர்கள் ஆவர். அவர்கள் இருவரையும் லோக்சபா மார்ஷல்கள் விரட்டிப் பிடித்து வெளியே கொண்டு சென்றனர். இந்த இருவரும் பார்வையாளர் மாடத்திலிருந்து குதித்தபோது காலில் இருந்த கலர் புகையை வெளியேற்றினர். கிட்டத்தட்ட கண்ணீர்ப் புகை போல அது இருந்தது. மஞ்சள் நிறத்தில் அந்தப் புகை இருந்தது. 




லோக்சபா வளாகத்திற்குள் இரு இளைஞர்கள் பிடிபட்ட நிலையில், நாடாளுமன்றத்திற்கு வெளியே போக்குவரத்து பவன் அருகே 2  பேர் இதே போல புகையைப் பரப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் ஹிஸ்ஸாரைச் சேர்ந்த நீலம் என்பவர் பெண். இன்னொருவர் பெயர் அமோல் ஷிண்டே, இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். இருவரையும் போலீஸார் மடக்கிப் பிடித்தனர். இருவரும் உரத்த குரலில் கோஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.




பிடிபட்ட நான்கு பேரும் திட்டமிட்டு இதைச் செய்ததாக கருதப்படுகிறது. நான்கு பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். நாடாளுமன்றத்திற்குள் தாக்குதலில் ஈடுபட்டவரில் ஒருவர் பெயர் சாகர் சரமா என்று தெரிய வந்துள்ளது. இன்னொருவர் பெயர் வெளியாகவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும், பல்வேறு விசாரணை அமைப்புகள் இணைந்து விசாரணையில் ஈடுபட்டிருப்பதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.