ஃபார்முலா 4 கார் பந்தயம் பார்க்க போறீங்களா? .. மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட சூப்பர் தகவல்

Aadmika
Aug 31, 2024,05:53 PM IST

சென்னை : சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 01 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை மெட்ரோ நிர்வாகம் ரசிகர்களுக்கு சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கு தடையில்லை என சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியதை அடுத்து சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றி ஆகஸ்ட் 31 ம் தேதி பகல் 2 மணிக்கு போட்டிகள் துவங்கி, இரவு 10 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா 4 பந்தய நிகழ்வான “சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட்” இன்று துவங்க உள்ளது. இதன்மூலம் இந்தியாவில் ஆன் ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா 4 பந்தயம் நடத்தும் முதல் நகரம் என்ற பெருமையை சென்னை பெற்றுள்ளது.


ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுவதை முன்னிட்டு சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மவுண்ட் ரோட்டில் வாலாஜா பாயிண்ட் நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில் சென்ட்ரல் லைட் பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும். சிவானந்தசாலை மற்றும் கொடி மரச் சாலை முற்றிலும் மூடப்படும். தீவுத்திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகள், வாலாஜா சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, ஈ.வி.ஆர். சாலை, ஆர்.ஏ. மன்றம், முத்துசாமி பாயின்ட், பாரிஸ் கார்னர் ஆகிய இடங்களில் கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வணிக வாகனங்கள் செல்ல பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.




9000 ரசிகர்களுக்கு ஏற்பாடு:


ஃபார்முலா 4 கார் பந்தயத்தை பார்ப்பதற்கு 9000 ரசிகர்கள் வரை இருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக சென்னை மெட்ரோவில் கட்டணம் இல்லாமல் இலவசமாக பயணம் செய்யலாம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 


இதுதொடர்பாக சென்னை மெட்ரோ வெளியிட்டுள்ள அறிக்கை: 


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) மூலம் சென்னை ஃபார்முலா 4 ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும்இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் வரும் ஆகஸ்ட் 31, 2024 (சனிக்கிழமை) மற்றும் செப்டம்பர் 1, 2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் இரவு நேர ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயம்நடைபெற உள்ளது. தெற்காசியாவிலேயே இரவு நேர ஃபார்முலா4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நடத்தும் முதல் நகரமாக சென்னை திகழ்கிறது. இந்நிகழ்விற்கு செல்லும் பயணிகளுக்கு தடையற்றபயணத்தை வழங்க சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னை ஃபார்முலா 4 ரேசிங் சர்க்யூட் உடன் இணைந்துஸ்பான்சர் செய்யப்பட்ட பிரத்யேக மெட்ரோ QR பயணச்சீட்டுகளை பயணிகளுக்கு வழங்குகிறது.


"Paytm Insider" மூலம் முன்பதிவு செய்யப்பட்ட சரியானடிஜிட்டல் டிக்கெட்டுகளுடன் நிகழ்வில் பங்கேற்பவர்களுக்குமட்டுமே இந்த ஸ்பான்சர் செய்யப்பட்ட பிரத்யேக டிஜிட்டல்மெட்ரோ பாஸ்கள் வழங்கப்படும். இந்த மெட்ரோ பாஸ்பயன்படுத்தி பயணிகள் எந்த ஒரு மெட்ரோ இரயில்நிலையத்தில் இருந்தும் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு மிகஅருகில் உள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில்நிலையத்திற்கு சென்று திரும்ப முடியும். 


நிகழ்வில் பங்கேற்பவர்கள் தங்கள் டிஜிட்டல் மெட்ரோபாஸில் உள்ள தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி கட்டணம் பெறும் இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு மெட்ரோ பாஸ்களை ஒரு சுற்றுப்பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம்.


Paytm இன்சைடர் மூலம் வாங்கப்பட்ட டிஜிட்டல்டிக்கெட்டுகள் உள்ளவர்களுக்கு மட்டுமே ஸ்பான்சர்செய்யப்பட்ட மெட்ரோ பயணம் கிடைக்கும். இந்தச் சலுகைக்குவேறு எந்த டிக்கெட்டுகளும் அல்லது பாஸ்களும் தகுதி பெறாது.


ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 01 ஆகிய நாட்களில் இந்த இலவச பயணத்தை ரசிகர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்