பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மரணம்.. துபாய் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

Su.tha Arivalagan
Feb 05, 2023,11:48 AM IST
டெல்லி: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் துபாய் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 79.

நீண்ட காலமாக அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். துபாயில் உள்ள அமெரிக்கன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனளிக்காமல் தற்போது அவரது உயிர் பிரிந்துள்ளது. அவரது உடல் பாகிஸ்தானுக்கு எப்போது கொண்டு வரப்படும் என்று தெரியவில்லை.

முஷாரப்புக்கு அமைலோய்டாசிஸ் என்ற நோய் இருந்தது. இதனால் அவரது உறுப்புகள் படிப்படியாக செயலிழந்து வந்தன.  இது மிகவும் அரிய வகை நோயாகும். அதிக அளவில் அமைலாய்ட் புரதம் உடலில் சுரப்பதால் வரும் பாதிப்பு இது.



பாகிஸ்தானில் அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதில் முக்கியமானது, முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு. இதன் காரணமாக பாகிஸ்தானை விட்டு வெளியேறிய முஷாரப், கடந்த எட்டு வருடமாக துபாயில் வசித்து வந்தார்.

இருப்பினும் மீண்டும் பாகிஸ்தான் திரும்பி மீதமுள்ள வாழ்க்கையை சொந்த நாட்டில் வாழ வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். விரைவில் பாகிஸ்தான் திரும்பவும் அவர் ஆர்வமாக இருந்தார். ஆனால் அவரது ஆசை நிறைவேறாமல் போய்விட்டது.

பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றி அதன் தலைமைத் தளபதியாக உயர்ந்தவர் முஷாரப். 1999ம் ஆண்டு ரத்தம் சிந்தாத ராணுவப் புரட்சி மூலம் அப்போதைய நவாஸ் ஷெரீப் ஆட்சியைக் கலைத்து விட்டு அதிபரானவர். நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்தபோது, அவருக்கே தெரிவிக்காமல் இந்தியாவுக்குள் ராணுவத்தை ஊடுறுவ உத்தரவிட்டார் அப்போதைய ராணுவ தளபதியாக இருந்த முஷாரப். கார்கில் போருக்குக் காரணமானவர் இவரே. இந்தியாவுக்குள் நுழைந்து லே  - ஸ்ரீநகர் பாதையை துண்டிக்குமாறு தனது படையினருக்கு உத்தரவிட்டார் முஷாரப். ஆனால் இந்தியப் படையின் அதிரடித் தாக்குதலில் பாகிஸ்தான் படையினர் நிலை குலைந்தனர். குறிப்பாக கார்கிலில் பாகிஸ்தான் படையினருக்கு மிக பலத்த அடி விழுந்தது.

இப்படி பாகிஸ்தான் படையினருக்கு கெட்ட பெயரை இவர் வாங்கிக் கொடுத்தாலும் கூட கார்கில் போர் முடிவடைந்த 2 வருடங்களுக்குப் பிறகு இவர் பின்னால் பாகிஸ்தான் ராணுவம் அணி திரண்டது. இதன் காரணமாக, நவாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்த்து விட்டு ராணுவ ஆட்சியை அமைத்தார் முஷாரப்.

இவரது ஆட்சியில் பாகிஸ்தானில் முற்றிலும் ஜனநாயக நடைமுறைகள் சீர்குலைந்து போய்விட்டன. கிட்டத்தட்ட 7 வருட காலம் முஷாரப் பிடியில் சிக்கித் தவித்தது பாகிஸ்தான்.  2001ம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தார் முஷாரப். உண்மையில் இவர் 1943ம் ஆண்டு டெல்லியில்தான் பிறந்தார். தேசப் பிரிவினையின்போது இவரது குடும்பம் பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தது. 

18 வயதில் பாகிஸ்தான் ராணுவத்தில் இணைந்தார் முஷாரப். பின்னர் எலைட் கமாண்டோ பிரிவில் இணைந்தார். அதன் தலைவராக உயர்ந்தார். தொடர்ந்து உயர்வை கண்டு வந்த முஷாரப் ராணுவத் தலைமைத் தளபதியாக உயர்ந்து, கடைசியில் நாட்டின் அதிபராக இருந்து தற்போது துபாயில் மறைந்துள்ளார்.