அட விஜய்யை முதல்ல அரசியலுக்கு வர விடுங்கங்க.. ஏன் தடுக்கறீங்க.. வரிந்து கட்டி வந்த செல்லூர் ராஜு!

Manjula Devi
Aug 21, 2024,04:11 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கொடி நாளை அறிமுகம் படுத்தப்பட உள்ள நிலையில் இன்னும்  களத்திற்கு வரவில்லை. விஜய் கட்சி தொடங்குவதை ஏன் இவர்கள் தடுக்கிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.


தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி  தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விஜயை கொண்டாடி வரும் நிலையில் நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள கட்சிக்கு பேராதரவு நிலவி வருகிறது. இது மட்டுமல்லாமல் தற்போது கமிட்டான படங்களை முடித்துவிட்டு 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முழுமையாக களமிறங்க உள்ள விஜய்க்காக ரசிகர்கள் தொண்டர்கள் என அனைவரும் காத்து வருகின்றனர்.


இதற்கிடையே கட்சி மாநாடு செப்டம்பர் 22 மிக பிரம்மாண்டமாக நடத்த  தமிழக வெற்றிக் கழகம் ஏற்பாடு செய்து வருகிறது. அப்போது இக்கட்சியின் கொடி மற்றும் சின்னம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் மாநாடு நடத்த ஆளும் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி தவெகவின் கட்சி கொடி அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இவ்விழாவை மிகவும் எளிமையாக நடத்த கட்சி சார்பாக முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது.




இந்த நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து, இன்னும் களத்திற்கு வரவே இல்லை.  விஜய்  கட்சி தொடங்குவதை ஏன் இவர்கள் தடுக்கிறார்கள். தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி அறிமுக விழாவிற்கு முறையாக அனுமதி வழங்குவதில் என்ன தவறு உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பி உள்ளார். 


அதேபோல் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜெயக்குமார் தமிழக வெற்றி கழகத்தால் திமுகவிற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தொடர்ந்து விஜய்க்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். கொடி அறிமுக விழாவிற்கு எவ்வளவு தடங்கல் செய்ய முடியுமோ அவ்வளவு தடங்கல் விஜய்க்கு கொடுக்கப்பட்டதாக சொல்கிறார்கள் என கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்