"சூப்பரா இருக்கு சு.வெங்கடேசன்"..  மதுரை எம்.பிக்குப் போனைப் போட்ட செல்லூர் ராஜு!

Su.tha Arivalagan
Jan 29, 2024,06:06 PM IST
மதுரை: தமிழ்ச் சமுதாய நாகரீகத்தின் தொட்டிலாக கீழடி  விளங்குவது போல, அரசியல் நாகரீகத்திற்கு மதுரை பிள்ளையார் சுழி போட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.  சு. வெங்கடேசனைப் பாராட்டிப் பேசியுள்ளார் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.

மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள்  ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதோ, சிரித்துக் கொள்வதோ, ஏன் பாராட்டிக் கொள்வதோ வெகு வெகு ஆபூர்வம் தமிழ்நாட்டில்.  குறிப்பாக ஜெயலலிதா, கருணாநிதி இருந்தவரை மாற்றுக் கட்சியினருடன் பேசிக் கொள்வதே மிகப் பெரிய ஆச்சரியமாக இருக்கும். 





ஆனால் இது காலப் போக்கில் மாற ஆரம்பித்தது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது
ஜெயலலிதாவைச் சந்தித்து மு.க.ஸ்டாலின் நிவாரண உதவியை வழங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதேபோல எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோதும் அவரை சந்தித்தார். ஈகோ இல்லாமல் அவர் இந்தத் தலைவர்களைச் சந்தித்தார்.


அதேபோல கருணாநிதி உடல் நலம் சரியில்லாமல் இருந்தபோது அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பி.எஸ்ஸும், மருத்துவமனைக்கு வந்து ஸ்டாலினிடம் நலம் விசாரித்த சம்பவமும் நடந்தது.  ஆனாலும் பெரும்பாலும் தமிழ்நாட்டில் இதுபோன்ற மாற்றுக் கட்சித் தலைவர்கள் சந்தித்துக் கொள்வது வெகு வெகு அபூர்வமானது.. அதிலும் பாராட்டிப் பேசுவது என்பதெல்லாம் ஆச்சரியமானது.





இந்த நிலையில் மதுரை எம்.பி சு. வெங்கடேசனை பாராட்டிப் பேசியுள்ளார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு. மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தைச் சுற்றிலும் நான்கு இடங்களில் உயர் மட்ட மின்கோபுரம் அமைத்துக் கொடுத்துள்ளார் சு. வெங்கடேசன். சமீபத்தில் இந்த மின்விளக்குகளை அவர் தொடங்கி வைத்தார். இந்த விளக்குகள் பொருத்தப்பட்ட பிறகு தெப்பக்குளமே ஜோராக மாறிப் போயிருக்கிறது. பளிச்சென வெளிச்சத்துடன் அந்த இடம் சூப்பராக காட்சி தருகிறது.


இந்தப் பணிக்காகத்தான் செல்லூர் ராஜு, சு. வெங்கடேசனை போனில் அழைத்துப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து சு. வெங்கடேசன் போட்டுள்ள டிவீட்டில், நேற்று மாலை அண்ணன் செல்லூர் ராஜு அவர்கள் தொலைபேசியில் அழைத்தார்.   வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தை சுற்றி உயர்மின் கோபுரம் அமைத்துள்ளது மிக சிறப்பாக இருக்கிறது. என்று சொல்லி வாழ்த்துகளை தெரிவித்தார். 





அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்தேன். எதிரெதிர் அரசியல் முகாம்களில் இருந்தாலும் நல்லதைப் பாராட்டும் அரசியல் நெறியை என்றும் காப்போம் என்று கூறியுள்ளார் சு. வெங்கடேசன்.


தமிழ் நாகரீகம் தந்த மதுரையில் தற்போது அரசியல் நாகரீகமும் கொடி கட்டிப் பறப்பது சந்தோஷமானதே.. தொடரட்டும்!