ராகுல் காந்தியை நேற்று புகழ்ந்து விட்டு.. இன்று டிவீட்டை டெலிட் செய்த.. செல்லூர் ராஜு!

Manjula Devi
May 22, 2024,05:44 PM IST

சென்னை: காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தியை புகழ்ந்து நேற்று ட்விட் செய்த பதிவை, இன்று நீக்கி உள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.


அதிமுகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான செல்லூர் ராஜு நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை புகழ்ந்து நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி என்று பதிவிட்டு, ராகுல் காந்தி பொதுமக்களுடன் உணவு அருந்தி கொண்டே பேசுவது போன்ற ஒரு வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்கள் முழுவதும் வேகமாக பரவி மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. 


செல்லூர் ராஜு காங்கிரஸ் பக்கம் போகப் போகிறாரா,  அதிமுகவுடன்  அதிருப்தியில் இருக்கிறாரா.. என்ற பல்வேறு கோணத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.




இந்த வீடியோ குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ராகுல் காந்தியின் எளிமைக்காக மட்டுமே இந்த வீடியோவை பதிவிட்டிருந்தேன். வேறு எந்த காரணமும் இல்லை. இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது என்று கூறியிருந்தார். இருப்பினும் அதிமுக தலைமை இந்த எக்ஸ் பதிவை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. செல்லூர் ராஜுவிடம் அதிமுக மேலிடத்திலிருந்து பேசியதாகவும் சொல்கிறார்கள். 


இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை புகழ்ந்து ட்விட் செய்த பதிவை இன்று  அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திடீரென நீக்கியுள்ளார்.  மாற்றுக் கட்சித் தலைவர்களை செல்லூர் ராஜு புகழ்வது புதிதல்ல. இதற்கு முன்பு மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரான மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் குறித்தும் பாராட்டி அவர் டிவீட் போட்டிருந்தார். ஆனால் அது பெரிய அளவில் அவருக்கு பிரச்சினையைத் தரவில்லை. ஆனால் ராகுல் காந்தி குறித்துப் போட்டது ஏன் பிரச்சினையானது என்று தெரியவில்லை.