69% இட ஒதுக்கீடு.. பிரகாஷ் ராஜ் பேட்டியைப் பார்த்தா சிரிப்புதான் வருது.. ஜெயக்குமார் கண்டனம்

Su.tha Arivalagan
Jun 02, 2024,04:37 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு அமல் செய்யப்பட்டதற்கு மறைந்த கருணாநிதிதான் காரணம் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.


சென்னையில் நேற்று கருணாநிதி நூற்றாண்டு புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறிய இட ஒதுக்கீடு தொடர்பான கருத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:




வரலாற்றை எண்ணி பார்க்காமல் எதாவது புகழ வேண்டும் என்ற கட்டளைக்கு ஏற்றது போல நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள் 69% இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் இருப்பதற்கு கருணாநிதி தான் காரணம் என்பதை பேசியுள்ளது நகைப்பை ஏற்படுத்துகிறது.


69% இடஒதுக்கீட்டை மத்திய அரசு‌ வரைமுறைபடுத்த எண்ணும் போது தமிழ்நாட்டில் அன்றைய முதல்வராக இருந்த அம்மா அவர்கள் சமூக நிதிக்கு எதிராக அமைந்துவிடும் என கடுமையாக எதிர்த்தார். பின்னர்‌ சட்டமன்றத்தில் அம்மா அவர்களின் ஆலோசனைக்கு பிறகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த நான் சட்டமன்றத்தில் 69% இடஒதுக்கீட்டிற்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாது என உறுதியளித்தேன்.


இதன் பின்னர் தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தனிசட்டமுன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு அம்மா தலைமையில் அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ் அவர்களை சந்தித்து வலியுறுத்தப்பட்டது.


தமிழ்நாட்டில்.. அசைக்க முடியாத சக்தியாக திமுக.. வெட்ட வெளிச்சமாக்கிய எக்சிட் போல் முடிவுகள்!


பின்னர் நீண்ட வலியுறுத்தலின் மூலம் குடியரசு தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டது. 1994-ஆம் ஆண்டு ஆகஸ்ட்-24,அரசியல் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அம்மா அவர்களின் சீரிய முயற்சியால் மட்டுமே 69% இடஒதுக்கீடு அன்று பாதுகாக்கப்பட்டது. இதற்காக தான் திராவிட கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் அம்மா அவர்களுக்கு 'சமூகநீதி காத்த வீராங்கனை' என்ற பட்டம் வழங்கினார்.


இவற்றையெல்லாம் அறிந்து கொள்ளாமால் அமைச்சர் சொல்லிக் கொடுப்பதை மட்டும் பேசி மக்களை ஏமாற்ற நினைப்பது கண்டனத்திற்குரியது. மிகவும் தரம் தாழ்ந்து போன எண்ணத்தின் விளைவு தான் இந்த பேச்சு. இது போன்று வரலாற்றை திரித்துக் கூறுவதை இத்தோடு பிரகாஷ்ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயக்குமார்.