தமிழ்நாட்டில்.. 11வது முறையாக தோல்வியைத் தழுவப் போகிறதா அதிமுக.. ஓ.பன்னீர் செல்வம் கேள்வி!

Manjula Devi
Jun 14, 2024,06:49 PM IST

சென்னை:   விக்கிரவாண்டி தேர்தலில் தோல்வியை சந்திக்க போகிறோமா.. அல்லது அனைவரும் இணைந்து வெற்றி பெற போகிறோமா.. என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுள்ளார்.


லோக்சபா தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் அக்கட்சி தோல்வியுற்றது. பல இடங்களில் 3வது இடத்தையும், சில இடங்களில் நான்காவது இடத்தையும் பிடித்து அதிர்ச்சி அளித்துள்ளது. 


தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அதிமுக இணைய வேண்டும். அனைத்துத் தலைவர்களும் இணைந்தால்தான் மீண்டும் வெல்ல முடியும் என்ற கோரிக்கையை சசிகலா, ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் வைத்து வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இந்தக் கோரிக்கையை மறைமுகமாக நிராகரித்துள்ளார். ஓபிஎஸ் விலகிய பிறகு நடந்த தேர்தலில் முன்பிருந்ததை விட கூடுதலான வாக்குகளைப் பெற்றுள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.




இந்த நிலையில், திமுக எம்எல்ஏ புகழேந்தி உயிரிழந்த நிலையில்,  விக்ரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வை அறிவிப்பை வெளியிட்டது. இந்தப் பின்னணியில், விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தோல்வியை சந்திக்கப் போகிறோமா? அல்லது இணைந்து வெற்றி பெற போகிறோமா என ஓபிஎஸ் கடிதம் ஒன்றின் மூலம் கேட்டுள்ளார்.


இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:


மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கம் பிளவுற்று கிடக்கும் இதே நிலையோடு நடைபெற இருக்கின்ற விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலை எதிர்கொண்டு பதினோராவது தொடர் தோல்வியை வரவு வைத்துக் கொள்வதா, இல்லை ஒன்றுபட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற கம்பீரமிடுக்கோடு கட்சியை களம் இறக்கி 2019ல் இதே விக்கிரவாண்டி தொகுதியில் நாம் ஈட்டிய  அன்றைய அதே இடைத்தேர்தல் வெற்றியை மீண்டும் நிலைநாட்டி கழகத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்து வர போகிறோமா என்கிற ஏக்கம் நிறைந்த எதிர்பார்ப்பு தொண்டர்களிடம் ததும்பி நிற்கிறது. 


எனவே கட்சி ஒன்றுபட்டால் தங்கள் பிடித்து தளர்ந்து போகுமோ என சுயநலத்தோடு சிந்திக்காமல் கட்சியைக் கைப்பற்றி கொள்வதிலும் கட்சியை காப்பாற்றுவதே முக்கியம் என்கிற பெருந்தன்மையிலான முடிவினை அனைவரும் கூடி எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கூறியுள்ளார்.