என்னோட ரத்தத்துல என்ன ஓடுது தெரியுமா.. மாத்த முடியுமா.. விடாமல் கெத்து காட்டும் ஓ.பி.எஸ்.!

Meenakshi
Jan 12, 2024,11:13 AM IST
தேனி: என்னுடைய உடம்பில் ஓடுகிற ரத்தம் அண்ணா திமுக ரத்தம். இந்த ரத்தத்தை யாராலும் மாற்ற முடியாது என்று அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழு சார்பில்  தேனியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது அதிமுகவில் மிக முக்கியமான தலைவராக இருந்தவர் ஓபிஎஸ். ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் ஜம்மென்று இருந்து வந்தார். ஜெயலலிதாவால் முதல்வர் பதவியில் அமர வைக்கப்பட்டவர். ஜெயலலிதா முழுமையாக நம்பிய தலைவரும் கூட.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் எல்லாமே தலைகீழாக மாறியது.  கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.  அடுத்தடுத்து சட்டப் போராட்டங்களில் ஈடுபட்டார். தற்போது  அதிமுகவின் அத்தனை அடையாளங்களையும் இழந்து விட்டார். எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக முழுமையாக கட்சியை தனது கட்டுக்குள் கொண்டு போய் விட்டார். 



ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் கட்சி சின்னம், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி கடந்த செப்டம்பர் மாதம்  வழக்கு தொடர்ந்தார் எடப்பாடி பழனிசாமி.  இந்த வழக்கு முடியும் வரை முதலில் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என அவர் கோரி இருந்தார். இதையடுத்து அதிமுகவின் பெயர், கொடி உள்ளிட்டவற்றை ஓ.பி.எஸ் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதி சதீஷ் குமார் உத்தரவிட்டார். 

இதை ஏற்றுக்கொள்ளாத ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. தனி நீதிபதியிடம் மீண்டும் முறையிட அறிவுறுத்தியது பெஞ்ச். ஒபிஎஸ்சை தவிர்த்து மற்ற தொண்டர்கள் கூட கொடி, சின்னத்தை பயன்படுத்தலாம் ஓபிஎஸ் மட்டும் தான் பயன்படுத்த கூடாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். 

இந்நிலையில், தேனியில்  அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழு சார்பில்  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:

கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை வாங்கலாம்.  என்னுடைய உடம்பில் ஓடுகிற ரத்தம் அண்ணா திமுக இரத்தம். இந்த ரத்தத்தை யாராலும் மாற்ற முடியாது. பத்தாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் பாஜகவிற்கு நாங்கள் தான் ஆதரவு கொடுத்து வருகிறோம். பாஜகவினர் இந்த நிமிடம் வரை என்னுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

கட்சியில் பிளவு இருந்தால் வெற்றி பெற முடியாது.  திராவிட கட்சிகள் ஒன்று சேர்ந்தால் தான் கழகம் வெற்றியடையும். தற்போது நிலைமைக்கு தகுந்தார் போல் எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார். பொய் பேசுவதில் அவர் மிகவும் திறமைமிக்கவர் என்றார் ஓ.பன்னீர் செல்வம்.